"செட்' தேர்வுக்கு அனுமதி அளிக்கப்படுமா? யுஜிசி துணைத் தலைவர் விளக்கம்

 தமிழக அரசிடமிருந்தோ அல்லது சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்திடமிருந்தோ  "செட்' தேர்வை நடத்த அனுமதி கேட்டு கோரிக்கை விடுக்கும்பட்சத்தில், அதற்கு அனுமதி அளிக்க பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு (யுஜிசி) எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்று யுஜிசி துணைத் தலைவர் ஹெச்.தேவராஜ் கூறினார். 

பல்கலைக்கழக, கல்லூரி உதவிப் பேராசிரியர் பணியிடத்துக்குத் தகுதி பெற டாக்டர் பட்டம் (பிஹெச்.டி) முடித்திருக்க வேண்டும். அல்லது சி.பி.எஸ்.இ. சார்பில் நடத்தப்படும் "நெட்' (தேசிய அளவிலான தகுதித் தேர்வு) தேர்விலோ, மாநிலங்கள் சார்பில் நடத்தப்படும் "செட்' (மாநில அளவிலான தேர்வு) தேர்விலோ தகுதி பெற்றிருக்க வேண்டும். இதில் "நெட்' தேர்வைக் காட்டிலும், "செட்' தேர்வு சற்று எளிதாக இருக்கும் என்பதால், பெரும்பாலானோர் இதில் பங்கேற்று உதவிப் பேராசிரியர் தகுதியைப் பெற்று வந்தனர்.

 இந்த நிலையில், இந்தத் தேர்வுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு காரணமாக, தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக "செட்' தேர்வு நடத்தப்படவில்லை. இந்த நிலையில், தமிழகத்தில் அந்தத் தேர்வை நடத்தி வரும் கோவை பாரதியார் பல்கலைக்கழக அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்த காரணத்தால்தான் கடந்த இரண்டு ஆண்டுகளாக "செட்' தேர்வு நடத்தப்படவில்லை. இப்போது இந்தத் தேர்வை நடத்த அனுமதி கேட்டு யுஜிசி-யிடம் விண்ணப்பித்துள்ளோம். அனுமதி கிடைத்ததும் தேர்வு நடத்தப்படும் என்றனர். 

"செட்' தேர்வு அனுமதி தொடர்பாக சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சென்னைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற யுஜிசி துணைத் தலைவர் தேவராஜிடம் கேட்டபோது, "செட்' தேர்வை நடத்த அனுமதி கேட்டு தமிழக அரசிடமிருந்தோ அல்லது சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்திடம் இருந்தோ எந்தவித கோரிக்கையும் இதுவரை யுஜிசிக்கு வரவில்லை. 

இப்போது கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் தேவை அதிகரித்திருப்பதால், மாநில அளவிலான "செட்' தேர்வு நடத்தப்படுவதும் அவசியம்தான். எனவே, தமிழகத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கும் பட்சத்தில், தேர்வு நடத்துவதற்கான அனுமதி அளிப்பதில் யுஜிசிக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்றார்.

Comments

Popular posts from this blog