குரூப் - 1 தேர்வு வயது வரம்பை உயர்த்தணும்:அரசுக்கு தேர்வர்கள் கோரிக்கை

'தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி., நடத்தும்,'குரூப் - 1' தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்த வேண்டும்' என, தமிழக அரசுக்கு தேர்வர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

துணை ஆட்சியர், காவல் துறை துணை கண்காணிப்பாளர் உட்பட, உயர்நிலை பணிகளுக்காக, டி.என்.பி.எஸ்.சி., நடத்தும், குரூப் - 1 தேர்வு, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான - யு.பி.எஸ்.சி., நடத்தும், குடிமைப் பணிகள் தேர்வுக்கு இணையானது. தற்போது, குரூப் - 1 தேர்வுக்கான அதிகபட்ச வயது வரம்பு, 35 ஆக உள்ளது. இந்த ஆண்டிற்கான குரூப் - 1 தேர்வு குறித்த அறிவிப்பு, இம்மாத இறுதியில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், கிராமப்புற இளைஞர்கள் இத்தேர்வில் வெற்றி பெற வசதியாக, வயது வரம்பை உயர்த்த வேண்டும் என, தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: குரூப் - 1 தேர்வு, யு.பி.எஸ்.சி., தேர்வு போல ஆண்டுதோறும் நடத்தப்படுவது இல்லை. குரூப் - 1 நிலையில், பெரும்பாலான காலிப் பணியிடங்கள் பதவி உயர்வு மூலம் நிரப்பப்படுவதால், நேரடி நியமனத்திற்கான பணியிடங்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. அதனால், அதிகபட்ச வயது வரம்பை தொடும் சிலர், இந்தத் தேர்வை எழுதும் வாய்ப்பை இழக்கும் சூழல் ஏற்படுகிறது.

மற்ற மாநிலங்களில், குரூப் - 1 தேர்வுக்கான வயது வரம்பு, 45 ஆக உள்ளது. எனவே, தமிழக அரசும் எங்கள் கோரிக்கையை பரிசீலித்து, வயது வரம்பை இரண்டு முதல் மூன்று ஆண்டு கள் அளவுக்கு உயர்த்த வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Comments

Popular posts from this blog