ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வு முறையில் புதிய மாற்றம்

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வு முறையில் பெரிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. போட்டித்தேர்வு எழுதுவோரின் புகைப்படம், அவர் தேர்வு எழுதும் பதிவு எண், அவருடைய பெயர் ஆகியவை தேர்வு எழுதும் முதல் தாளில் அச்சாகிறது. இந்த புதிய முறை வருகிற 10-ந்தேதி நடக்கும் முதுகலை பட்டதாரிகளுக்கான தேர்வில் அறிமுகப்படுத்தப்படுகிறது.

புதிய முறை
சென்னை டி.பி.ஐ.வளாகத்தில் ஆசிரியர் தேர்வு மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தின் தலைவராக விபுநய்யர் என்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரி உள்ளார். அரசின் வழி காட்டுதலின் படி ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் புதிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. அதன்படி தேர்வு எழுதுவோரின் ஓ.எம்.ஆர்.சீட்டில் ஒரு முறை ஒரு பதிலை எழுதிவிட்டு மறுபடி அதை அவரே நினைத்தாலும் திருத்தி எழுத முடியாது. மேலும் தேர்வு எழுதுவோரின் புகைப்படம், தேர்வு எழுதுவோரின் பெயர், பதிவு எண் ஆகியவை ஓ.எம்.ஆர்.சீட்டின் முதல் பக்கத்தில் அச்சாகி இருக்கும். தேர்வு எழுதுவோர் எந்த காரணத்தை கொண்டும் அவரது பெயரையோ, அவரது தேர்வு எண்ணையோ எழுதத் தேவை இல்லை.

10-ந்தேதி அறிமுகம்
இந்த புதிய முறை வருகிற 10-ந்தேதி அறிமுகப்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாகக் கிடக்கும் 1,807 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதற்காக விண்ணப்பங்கள் பெறப்பட்டு போட்டித்தேர்வு ஜனவரி 10-ந்தேதி நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு மையங்களில் இந்த தேர்வு நடைபெற உள்ளது.

அதிகாரிகள் ஆய்வு
ஓ.எம்.ஆர்.சீட் சரியாக போய்ச் சேர்ந்துள்ளதா?, தேர்வு எழுதும் இடத்தில் மின்சாரம் தடைபடாமல் இருக்குமா என்று ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள், பள்ளிக் கல்வித்துறை இயக்குனர்கள் கு.தேவராஜன், க.அறிவொளி, தண்.வசுந்தராதேவி, வி.சி.ராமேஸ்வர முருகன், இளங்கோவன், ச.கண்ணப்பன், இரா.பிச்சை, ராஜராஜேஸ்வரி, இணை இயக்குனர்கள் கருப்பசாமி, உஷா, தரும ராஜேந்திரன், உஷாராணி, கார்மேகம், லதா, பழனிச்சாமி, பாலமுருகன், ராமராஜன், உமா, நரேஷ் மற்றும் பலர் மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.


Comments

Popular posts from this blog