கல்வித்திட்டம் மாற்றம் : 4 ஆண்டாகிறது மேல்நிலைக்கல்வி 10ம் வகுப்பு பொது தேர்வு ரத்து?

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இந்திய கல்வி முறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான பூர்வாங்க பணிகளை தொடங்கியுள்ளது. கல்வியின் தரத்தை உயர்த்த போவதாக அறிவித்து இந்த மாற்றம் நடைபெற்று வருகின்றது.

அதன்படி 8ம் வகுப்பு வரை உள்ள பள்ளி கல்விக்கு பின் 10 மற்றும் 12ம் வகுப்பு என 2 அடுக்காக பிரித்து பயிற்றுவிக்கப்பட்டு வரும் உயர்நிலை மற்றும் மேல்நிலை கல்வி திட்டத்தை மாற்றி 8ம் வகுப்பு வரை படித்து முடித்த பின்னர் தொடர்ந்து 4 ஆண்டுகள் படிப்புக்கும் ஒரே கட்டமைப்பாக மேல்நிலை கல்வியை மாற்றும் வகையில் கல்வி திட்டத்தை உருவாக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்மூலம் 10ம் வகுப்பு பொது தேர்வு ரத்தாகி விடும் நிலை உள்ளது.

மேலும் குறைந்த பட்ச கல்வி தகுதியாக ஒரு சில பணிகளுக்கும், ஐடிஐ போன்ற தொழிற்கல்விக்கும் 10ம் வகுப்பு என்று நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதை 8ம் வகுப்பாக குறைத்து விடவும் வாய்ப்பு உள்ளது. மேலும் பாலிடெக்னிக் போன்ற படிப்புகளுக்கும் பல்வேறு அரசு பணிகளுக்கான தகுதியை 10லிருந்து 12ம் வகுப்பாக உயர்த்துவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. கல்வி தகுதியை உயர்த்துகின்ற நோக்கத்தில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொள்கிறது என்ற கோணத்தில் பார்த்தால் அது வரவேற்கத்தக்க அம்சமாக உள்ளது.

அதேநேரத்தில் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டால் தற்போதைய கல்விக்கட்டண உயர்வு, கல்வித்துறையில் தனியாரின் ஆக்கிரமிப்பு போன்றவற்றால் ஏழை மாணவர்கள் தொடர்ந்து 12 ஆண்டுகள் படிக்க முடியாமல் போகும் அபாயம் உள்ளது. குறைந்தபட்சமாக 10ம் வகுப்பு வரை படித்திருக்கும் ஏழைகளுக்கு பணி வாய்ப்பு பறிபோகும். பல மாணவர்களின் கல்வி தகுதி எதிர்காலத்தில் 8ம் வகுப்புடன் நின்று விடுவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது என்ற அச்சத்தையும் சமூக ஆர்வலர்கள் சிலர் வெளிப்படுத்துகின்றனர்.

மத்திய அரசு கல்வித்திட்டத்தை மாற்றி அமைக்கும்போது பொது கருத்து கேட்பு மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளும் அங்கீகரிக்கின்ற அறிஞர்கள் குழுவை ஏற்படுத்தி மாநிலம் வாரியாக ஆய்வு செய்த பின்பு தான் புதிய கல்வி திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பை அனைத்து தரப்பினரும் வெளிப்படுத்தியுள்ளனர்.

பொது பள்ளிக்கான மாநில மேடை ஒருங்கிணைப்பாளர் சென்னையை சேர்ந்த பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறியதாவது: அம்பேத்கர் வகுத்த சட்டம் அரசு தான் கல்வியை வழங்க வேண்டும் என்று கூறுகிறது. ஆனால் வாஜ்பாய் தலைமையில் பொறுப்பேற்ற கடந்த பாஜ ஆட்சியில் குடிமக்களின் கடமை என்ற தலைப்பில் ஒரு ஷரத்தை சேர்த்து தங்கள் பிள்ளைகளுக்கு கல்வியை வழங்குவது பெற்றோர் அல்லது பாதுகாவலரின் கடமை என்று மாற்றி அமைத்தது. அதை அடிப்படையாக வைத்து கடந்த காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு கல்வித்துறையில் தனியாரை அனுமதித்து அரசுடன் சேர்ந்து கூட்டாக கல்வி நிறுவனங்களை நடத்துவது என்ற நிலையை வகுத்தார்கள்.

தற்போதைய மோடி தலைமையிலான பாஜ அரசு பல்கலைக்கழக மானிய குழுவை கலைத்தோ அல்லது மாற்றத்தை கொண்டு வந்தோ கல்விக்கான உதவி திட்டத்தை தடுக்க முயற்சித்து வருகின்றது. இதன் மூலம் எதிர்காலத்தில் பன்னாட்டு நிறுவனங்களை கல்வி உதவித்தொகை வழங்க வைத்து பன்னாட்டு நிறுவனங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்து கொடுப்பதற்காகவே கல்வி திட்டத்தை மாற்றி அமைக்கிறது. அதே நேரம் கல்வி பாடத்திட்டத்திலும் மாற்றம் செய்து தங்கள் மொழி கொள்கையை திணிக்கவும், அதன் வழியாக இளம் வயதிலேயே காவிமயத்தை புகுத்துவதற்கும், வகுப்பு வாதத்தை முன்னெடுக்கவும் மத்திய அரசு முயற்சி செய்கின்றது. அதனால் தான் கல்வி திட்டத்தில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்குவதாக தோற்றத்தை ஏற்படுத்தி 10ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்துவிட்டு மேல்நிலைக்கல்வியை 4 ஆண்டுகள் என்ற ஒரே கட்டமைப்பாக மாற்றுவதற்கு மத்திய அரசு முனைப்பாக உள்ளது.

இதை அனைவரும் போராடி தடுக்க வேண்டும். தற்போதுள்ள 8+2+2 என்ற கல்வி திட்டத்தை மாற்றுவதற்குரிய சமூக சூழல் மாறவில்லை. அந்த சூழலை அடைந்தபிறகு இதுபோன்ற மாற்றங்களை கொண்டு வரலாம் என்பதை சமூக அமைதியை விரும்புகின்றவர்கள் ஒவ்வொருவரும் வலியுறுத்த வேண்டும். இவ்வாறு பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறினார்.


Comments

Popular posts from this blog