2 ஆண்டு பி.எட். படிப்புக்கான கல்வித் திட்டம் தயார்- துணைவேந்தர்.

இரண்டு ஆண்டு பி.எட்., எம்.எட். படிப்புகளுக்கான கல்வித் திட்டங்கள் தயார்நிலையில் உள்ளது என தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி. விஸ்வநாதன் கூறினார்.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி,நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்கல்வியியல் கல்லூரிகளுக்கான புதிய வழிகாட்டுதலை தேசிய ஆசிரியர் கல்வியியல் கல்விக் கவுன்சில் (என்.சி.டி.இ.) வெளியிட்டது.

இந்த வழிகாட்டுதலின்படி பி.எட்., எம்.எட். படிப்புகளின் படிப்புக் காலம் 2015-16கல்வியாண்டு முதல் 2 ஆண்டுகளாகஉயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான மாதிரி கல்வித் திட்டத்தையும் என்.சி.டி.இ.வெளியிட்டது.

அதன்படி, இரண்டாண்டு பி.எட். படிப்பில் தகவல் தொழில்நுட்பக் கல்வி, யோகா கல்வி, பாலினக் கல்வி, மாற்றுத்திறன் - ஒருங்கிணைந்த கல்வி ஆகிய 4 தலைப்புகளும் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்களும், ஆசிரியர் பயிற்றுநர்களும் யோகா கற்பது கட்டாயமாக்ப்பட்டுள்ளது.

மேலும், பி.எட். கல்வித் திட்டம் மூன்று முக்கிய பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அதாவது தியரி (பாடம்), செய்முறை பயிற்சி, தொழில் பயிற்சி (இன்டர்ன்ஷிப்) மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் தொழில் பயிற்சிக்கு மொத்த படிப்புக் காலத்தில் 25 சதவீத காலத்தை ஒதுக்க வேண்டியது கட்டாயமாகும்.

இந்த நிலையில், படிப்புக் காலத்தை 2 ஆண்டுகளாக உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தைச் சேர்ந்த தனியார் பி.எட். கல்லூரிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்த வழக்கு நிலுவையில் உள்ளதால், வரும் கல்வியாண்டில் பி.எட். படிப்பு தமிழகத்தில் ஓராண்டாக இருக்குமா அல்லது 2 ஆண்டுகளாக உயர்த்ப்பட்டுவிடுமா என்ற குழப்பம் நீடித்து வருகிறது.

இந்த நிலையில்,இரண்டு ஆண்டு பி.எட்., எம்.எட்.படிப்புக்கான கல்வித் திட்டம், பாடத்திட்டங்களை தமிழ்நாடு ஆசிரயிர் கல்வியியல் பல்கலைக்கழகம் தயார் நிலையில் வைத்துள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி. விஸ்வநாதன் கூறியது: தமிழகத்தில் பி.எட். ஓராண்டா அல்லது இரண்டு ஆண்டுகளா என்பது நீதிமன்ற தீர்ப்பைப் பொருத்தே அமையும். இருந்தபோதும், என்.சி.டி.இ. அறிவுறுத்தலின்படி 2 ஆண்டு பி.எட்., எம்.எட். படிப்புகளுக்கான கல்வித் திட்டம், மாதிரி பாடத் திட்டங்களை உரிய வழிகாட்டுதல்களின்படி பல்கலைக்கழகம் தயார் செய்துள்ளது. இதில் மாணவர் திறன் மேம்பாட்டுக்கான பல்வேறு பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. தீர்ப்பைப் பொருத்து, கல்வித் திட்டத்தை கல்லூரிகளுக்கு உடனடியாக அச்சடித்த வழங்கும் வகையில் பல்கலைக்கழகம் தயாராக உள்ளது என்றார்.

Comments

Popular posts from this blog