அரசு மேல்நிலைப்பள்ளிகளில் முன்னுரிமை அடிப்படையில் கணினி ஆசிரியர் நியமிக்க தடை: ஐகோர்ட் உத்தரவு

அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடங்களில்முன்னுரிமை அடிப்படையில் பணி நியமனம் வழங்க உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

முன்னாள் ராணுவ வீரர் மகன் டான்போஸ்கோ உள்பட 3 பேர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: நாங்கள் கம்ப்யூட்டர் ஆசிரியராக படித்து முடித்து வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பல ஆண்டுகளாக காத்திருக்கிறோம். தற்போது, தமிழகம் முழுவதும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு கம்ப்யூட்டர் பாடம் எடுக்க கம்ப்யூட்டர் ஆசிரியர்களை அரசு தேர்வு செய்து வருகிறது. இதற்கான கவுன்சலிங் வரும் 4ம் தேதி (நாளை) நடக்கிறது.சீனியாரிட்டி பட்டியலை வேலைவாய்ப்பு அலுவலகம் அரசுக்கு அனுப்பியுள்ளது. இதில் விதவைகளுக்கும், கலப்பு திருமணம் செய்தவர்களுக்கும் மட்டும் முன்னுரிமைகொடுத்துள்ளது.

இது தவறானது. முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கும் முன்னுரிமை தர வேண்டும் என்று அரசு உத்தரவில் தெளிவாக கூறியும் இதை பின்பற்றவில்லை. இதனால் நாங் கள் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே, புதிய ஆசிரியர்களை நியமிக்க தடை விதிக்க வேண்டும். கவுன்சலிங்கிற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.

இந்த மனுவை நீதிபதி கே.கே.சசிதரன் விசாரித்தார்.மனுதாரர் சார்பாக வக்கீல் தாட்சண்யா ரெட்டி ஆஜராகி, மனுதாரர்களுக்கும் முன்னுரிமை தர வேண்டும். அதுவரை கவுன்சலிங்கிற்கு தடை விதிக்க வேண்டும் என்றார். இதை கேட்ட நீதிபதி, ஆசிரியருக்கான கவுன்சலிங் நடத்தலாம். ஆனால் முன்னுரிமை பிரிவில் தேர்வு செய்தவர்களுக்கு பணி வழங்க தடை விதிக்கிறேன் என்று உத்தரவிட்டு வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வரும் 30ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Comments

Popular posts from this blog