ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிக்கு இம்மாத இறுதிக்குள் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு விடுவர்கள்.

ஆதிதிராவிடர் நலத்துறை நடுநிலைப் பள்ளியில், இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே இருப்பதால், மாணவர்களின் கல்வி, பாதிக்கப்பட்டு வருகிறது.

பொன்னேரி, அம்பேத்கர் சிலை அருகில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை நடுநிலைப் பள்ளியில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, 81 மாணவர்கள் படிக்கின்றனர். இங்கு, எட்டு ஆசிரியர்கள் பணிபுரிந்து வந்த நிலையில், தற்போது, இருவர் மட்டுமே உள்ளனர். போதிய ஆசிரியர்கள் இல்லாததால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு வருகிறது.

தலைமையாசிரியர் இல்லை மேலும், கடந்த மார்ச் மாதம்முதல், தலைமையாசிரியர் பதவி உயர்வில், வேறு இடத்திற்கு சென்ற பிறகு, புதிதாக தலைமையாசிரியர் நியமிக்கப்படவில்லை. இதனால், பள்ளி படிப்பை முடித்துவிட்டு, செல்லும் மாணவர்களுக்கு, மாற்று சான்றிதழ் வழங்குவதில் சிரமம் தொடர்கிறது.

கடந்த ஆண்டு, பள்ளி அருகில் உள்ள ரயில் நிலைய சாலையோரம்வசித்து வந்தவர்கள், அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, பழவேற்காடு சாலையில் உள்ள வஞ்சிவாக்கம் பகுதியில் குடியமர்த்தப்பட்டனர். அவர்களது பிள்ளைகள் மேற்கண்ட பள்ளியில் படித்து வந்த நிலையில், தற்போது, பள்ளிக்கும், குடியிருப்புக்கும், 12 கி.மீ., தொலைவு உள்ளது.

மாற்று சான்றிதழ் பெற... இதனால், பிள்ளைகளை வஞ்சிவாக்கம் அல்லது திருப்பாலைவனம் அரசு பள்ளியில் சேர்க்க உள்ளனர்.

அதற்காக, மாற்று சான்றிதழ் பெறுவதற்கு பொன்னேரி ஆதிதிராவிடர் நலப் பள்ளிக்கு சென்றால், தலைமையாசிரியர் இல்லை என, கூறி பெற்றோர் அலைகழிக்கப்பட்டு வருகின்றனர். பள்ளியில் போதிய ஆசிரியர் இல்லாததால், பெற்றோர், அவர்களது பிள்ளைகளை வேறு பள்ளிகளுக்கு மாற்றி விடலாமா? என, ஆலோசித்து வருகின்றனர். மேற்கண்ட பள்ளிக்கு, தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களை பணியமர்த்த, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ''பணியிடம் மாறுதல் கலந்தாய்வு நடைபெறஉள்ளதால், மேற்கண்ட பள்ளிக்கு இம்மாத இறுதிக்குள் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு விடுவர்,'' என்றார்.

Comments

Popular posts from this blog