ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து அரசு ஊழியர்களின் கோரிக்கைகளும் திராவிட முன்னேற்றக் கழக அரசு அமைந்தவுடன் நிச்சயம் நிறைவேற்றித் தரப்படும்: ஸ்டாலின் உறுதி

      ஆசிரியர்கள் முன் வைத்த அடிப்படைக் கோரிக்கைகளைக் கூட   அ.தி.மு.க. அரசு நிறைவேற்றிக் கொடுக்கவில்லை என்பது மிகவும் துரதிருஷ்டவசமானது. ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோவின் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் இன்று பங்கேற்று துவக்கி வைத்தேன். 15 அம்சக் கோரிக்கைகளை முன் வைத்து ஆசிரியர்கள் போராடி வருகிறார்கள். "அரசு ஊழியர்களுக்கு இணையாக ஆசிரியர்களுக்கு ஊதியம்", "புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வது",

"தொடக்கப் பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வியை கட்டாயமாக்குவது" உள்ளிட்ட அந்த 15 கோரிக்கைகளை ஆசிரியர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். இதற்காக 2013- ஆம் வருடத்திலிருந்து அ.தி.மு.க. அரசிடம் பல்வேறு கோரிக்கை மனுக்கள் கொடுத்தும், போராடியும் வருகிறார்கள். ஆனால் இதுவரை எந்த கோரிக்கையையும் அ.தி.மு.க. அரசு நிறைவேற்றிக் கொடுக்கவில்லை. உலகம் முழுவதும் உள்ள அரசுகள் கற்றுக் கொடுப்பது ஒரு புனிதமான பணி என்று கருதி ஆசிரியர்களை மதித்து, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருகிற போது, இங்குள்ள அ.தி.மு.க. அரசு மட்டும் ஆசிரியர்களின் குறைந்தபட்சக் கோரிக்கைகளைக் கூட நிறைவேற்றிக் கொடுக்காதது மிகுந்த வருத்தமளிக்கிறது. இந்த ஆட்சியில் ஆசிரியர்கள் மட்டும் பாதிக்கப்படவில்லை. சாலைப் பணியாளர்கள், சத்துணவுப் பணியாளர்கள், மக்கள் நலப் பணியாளர்கள், மாற்றுத் திறனாளிகள், மாணவர்கள் மற்றும் விவசாயிகள் என்று அனைத்துத் தரப்பினரின் கோரிக்கைகளையும் இந்த அரசு கண்டு கொள்ளவில்லை. அனைத்து தரப்பினரும் அ.தி.மு.க. அரசின் பாராமுகத்தால் படு மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதுதான் இன்றைய நிலைமை. ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து அரசு ஊழியர்களின் கோரிக்கைகளும் திராவிட முன்னேற்றக் கழக அரசு அமைந்தவுடன் நிச்சயம் நிறைவேற்றித் தரப்படும் என்று இந்த தருணத்தில் உறுதியளிக்க விரும்புகிறேன்.

Comments

Popular posts from this blog