பெண்கள் பாதுகாப்புக்கு செல்லிடப்பேசியில் அபாய பொத்தான் வசதி

ஆபத்தான நேரங்களில் போலீஸாரை உடனடியாக உதவிக்கு அழைக்க, பெண்களின் செல்லிடப்பேசியில் அபாய பொத்தான் வசதியை ஏற்படுத்தித் தர, செல்லிடப்பேசி தயாரிப்பு நிறுவனங்கள் ஒப்புக்கொண்டுள்ளன என்று மத்திய குழந்தைகள், மகளிர் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்தார்

. இதுதொடர்பாக அவர், தில்லியில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை மேலும் கூறியதாவது: பெண்களின் பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படும்போது, உடனடியாக அவர்கள் தங்களது செல்லிடப்பேசியின் மூலம் போலீஸாரை உதவிக்கு அழைக்கும் வசதியை ஏற்படுத்தித் தர வேண்டுமென, செல்லிடப்பேசி தயாரிப்பு நிறுவனங்களிடம் அமைச்சகம் கோரியிருந்தது.

இதுதொடர்பாக, கடந்த ஓராண்டாக அந்த நிறுவனங்களுடன் பலகட்டப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. அதன் பயனாக, அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள், இந்த பிரத்யேக வசதியை ஏற்படுத்தித் தர செல்லிடப்பேசி தயாரிப்பு நிறுவனங்கள் ஒப்புக்கொண்டுள்ளன. இதன்படி, பெண்களிடம் தற்போது பயன்பாட்டில் உள்ள செல்லிடப்பேசிகளிலும், எதிர்காலத்தில் சந்தைக்கு விற்பனைக்கு வரும் செல்லிடப்பேசிகளிலும் அபாய பொத்தான் வசதியை ஏற்படுத்துவது தொடர்பான தொழில்நுட்பப் பணிகளை அந்த நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளன. இதுதொடர்பான வழிகாட்டி நெறிமுறைகளை மத்திய தொலைத்தொடர்புத் துறை விரைவில் வெளியிடும்.

தேசிய அளவில் உதவி எண்: இதுதவிர, பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், தேசிய அளவிலான தொலைப்பேசி உதவி எண்ணை உருவாக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் வாயிலாக, பாலியல் வன்கொடுமை போன்றவற்றுக்கு ஆளாகும் பெண்களுக்கு, சட்டரீதியான மற்றும் உளவியல்ரீதியான ஆலோசனைகள் வழங்கப்படும்.

Comments

Popular posts from this blog