10ம் வகுப்பு தேர்வு தேதி மாறுகிறதா? : தேர்தலுக்கு தயாராகிறது தமிழகம்

தமிழக சட்டசபை தேர்தல் தேதி எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் என்ற நிலையில், 10ம் வகுப்பு தேர்வுகள் நடக்கும் சமயத்தில் தேர்தல் தேதியும் வர வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இதனால் தேர்வு தேதிகள் மாற்றி அமைக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தேர்வு தேதி மாற்றம் குறித்து மத்திய தலைமை தேர்தல் கமிஷனர் முடிவு செய்வார் என இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி சந்தித்தார். அப்போது அவர், பொங்கல் முடிந்த பின் மத்திய தேர்தல் கமிஷனர் தலைமையிலான குழு தமிழகம் வர உள்ளது. தமிழக ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளுடன் மத்திய தேர்தல் குழு ஆலோசனை நடத்தும். வெள்ளம் பாதித்த பகுதிகளில் இதுவரை 43,000 பேர் வாக்காளர் அடையாள அட்டை கோரி விண்ணப்பித்துள்ளனர். 18,000 பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 20ம் தேதி வெளியிடப்படும்.

அரசியல் கட்சிகள் சமூக வலைதளங்கள் மூலம் செய்யும் பிரசாரத்தை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் இருந்து புதிய கண்காணிப்பு மென்பொருள் வாங்கப்பட்டுள்ளது. தேர்வு அட்டணை தலைமை தேர்தல் கமிஷனருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தேர்வு அட்டணையில் மாற்றம் செய்வது குறித்து தேர்தல் கமிஷனர் இறுதி முடிவு எடுப்பார் என ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். 12 & 10ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 4ம் தேதி துவங்கி ஏப்ரல் 13ம் தேதி வரை நடைபெறும் என தமிழக தேர்வுத்துறை நேற்று அறிவித்திருந்தது.

இதனால் ஏப்ரல் 13 ம் தேதிக்குள் தமிழக சட்டசபை தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளது உறுதியாகி உள்ளது. இதன் காரணமாக தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் வேலைகளை துவக்கி உள்ளன. அதிமுக, நல்ல நேரம் பார்த்து தனது தேர்தல் பிரச்சாரத்தை இன்று துவக்க உள்ளதாக கூறப்படுகிறது. திமுக பொருளாளர் ஸ்டாலின் தனது அடுத்த கட்ட நமக்கு நாமே பயணத்தை இன்று துவக்கி உள்ளார்.

Comments

Popular posts from this blog