மாநிலம் முழுவதும் ஆசிரியர் போராட்டம்; 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் இன்று ஆசிரியர் கூட்டமைப்பினர் மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் நடந்த இந்த போராட்டத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர் .

மத்திய அரசு ஆசிரியர்களுக்கு நிகரான ஊதியம் வழங்க வலியுறுத்தல், 6வது ஊதிய குழு பரிந்துரைத்த படிகள் வழங்க வேண்டும் , புதிய பென்சன் திட்டத்தை கைவிட வலியுறுத்தல், தாய்வழி தமிழ் பாடத்தை முதல் பாடமாக அறிவிக்க வேண்டும், ஒப்பந்த அடிப்படை மற்றும் தொகுப்பூதிய நியமனத்தில் பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களுக்கு பணிவரன் முறை செய்து காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தல், தமிழ் வழிக்கல்வி திட்டத்தை செயல்படுத்துதல் , மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் பள்ளிகள் மூடப்படுவதற்கு எதிர்ப்பு உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் தமிழ்நாடு ஆசிரியர் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு ஜேக்டோ சார்பில் இன்று முதல் 3 நாள் போராட்டம் நடத்த முடிவு செய்தனர் .

இதனால் இன்று மாவட்ட தலைநகரங்களில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடந்தது. அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர் .போரட்டத்தில் ஈடுபட்ட ஆசிரிய ஆசிரியைகளை போலீசார் கைது செய்து பல்வேறு திருமண மண்டபங்களில் அடைத்து வைத்தனர் .

திருச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், மதுரையில் 500 பேர் , நீலகிரியில் 324 பேர், கோவையில் 950 பேர் , இது போல் நெல்லை கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல் , தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பலர் கைது செய்யப்பட்டனர் .

வரும் 1ம் தேதி போராட்டம் நடத்தப்படுவதால் பயிற்றுனர்களை வைத்து பள்ளிகளை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் வரும் 1ம் தேதி யாரும் விடுமுறை எடுக்கக் கூடாது என்றும் அரசு எச்சரித்துள்ளது . போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரிய, ஆசிரியைகளின் பெயர் விவரத்தை மாவட்ட கல்வி துறை அதிகாரிகள் சேகரித்து வருவதாவும் கூறப்படுகிறது . ஆனால் போராட்டத்தை வலுப்பெற செய்து காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யவும் ஆசிரியர் கூட்டமைப்பினர் கடும் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

Comments

Popular posts from this blog