புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்கக் கூடாது: பொது பள்ளி மேடை அமைப்பு வலியுறுத்தல்.
மத்திய அரசு பரிந்துரைக்கும் புதிய கல்விக் கொள்கையை, மக்களிடம் கருத்து கேட்காமல் தமிழக அரசு ஏற்கக் கூடாது என்று பொது பள்ளி மேடை அமைப்பு செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறினார்.

திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியது: மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் ஒரு குழுவை அமைத்து, புதிய கல்விக் கொள்கை தொடர்பான பரிந்துரைகளைப்பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், அந்தப் பரிந்துரைகளின் உள்ளடக்கத்தை இதுவரை மக்களுக்குத் தெரிவிக்கவில்லை. எனவே, அதன் மீது பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. அனைத்துத் தரப்பினரிடமும் கருத்துகளைப் பெற்ற பின்னர்தான், புதிய கல்விக் கொள்கையை உருவாக்க வேண்டும்.பன்முக பண்பாட்டைக் கொண்டாடக் கூடிய கல்வி முறைதான் இந்தியாவுக்கு தேவை. கல்வி வளாகமும், வகுப்பறையும் மதச்சார்பற்ற இடம். எனவே, கல்வியில் வணிகமயம், வகுப்புவாதம் கூடாது.

அரசுக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை வலுப்படுத்த வேண்டுமே தவிர, தனியாரை அனுமதித்து, கல்வியை வியாபாரப் பொருளாக்கக் கூடாது. கல்விக் கொள்கையை உருவாக்க மாநில அரசுக்கு உரிமை உண்டு. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை பரிந்துரைகளை, கல்வியாளர்களைக் கொண்டு ஆய்வு செய்து, பின்னர் தனது நிலையை மத்திய அரசுக்கு தமிழக அரசு தெரியப்படுத்த வேண்டும்.

மக்களிடம் கருத்து கேட்காமல், புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்கக் கூடாது. இது தொடர்பாக முதல்வரை சந்திக்க முடிவு செய்துள்ளோம் என்றார்.

Comments

Popular posts from this blog