வகுப்பறையில் மொபைல் போன் பயன்படுத்த ஆசிரியர்களுக்கு...தடை!: மாணவர்கள் பள்ளிக்கு கொண்டு வரவே கூடாது என எச்சரிக்கை.
தமிழகத்தில், துவக்கப் பள்ளி முதல், மேல்நிலைப் பள்ளிகள்வரை, எந்த பள்ளி ஆசிரியர்களும், வகுப்பறையில் மொபைல் போன் பயன்படுத்தக் கூடாது என, தடை விதிக்கப்பட்டுள்ளது.மாணவர்கள் எக்காரணம் கொண்டும், பள்ளிக்கு மொபைல் போன் கொண்டு வரவே கூடாது என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தொடக்க கல்வி இயக்குனர் அறிக்கை: * மாணவர்களின் கவனச் சிதறலை தடுக்கும் வகையில், மாணவர்கள், பள்ளிகளுக்கு மொபைல் போன் கொண்டு வர தடை விதித்து, 2007ம் ஆண்டே அரசாணை கொண்டு வரப் பட்டுள்ளது.இதன் படி, மாணவ, மாணவியர், பள்ளிகளுக்கு மொபைல் போன் கொண்டு வர தடை விதிக்கப் படுகிறது. இதை, ஆசிரியர்களும் உறுதி செய்ய வேண்டும்
* மீறி யாரும் கொண்டு வந்தால், சம்பந்தப்பட்ட பெற்றோரை அழைத்து, ஆசிரியர்கள் அறிவுரை வழங்க வேண்டும்
* வகுப்பறையில் பாடம் நடத்தும்போது, ஆசிரியர்கள் மொபைல்போனை, 'சுவிட்ச் ஆப்' செய்து வைக்க வேண்டும்; மீறினால், ஆசிரியர் கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பள்ளி கல்வி இயக்குனர் அறிக்கை: *l வகுப்பறையில், ஆசிரியர்கள் எக்காரணம்கொண்டும் மொபைல் போன்களைபயன்படுத்தக் கூடாது. வகுப்பறையில், மொபைல் போனில் பேசினால், அந்த ஆசிரியர் மீது, தலைமை ஆசிரியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
* மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது, மொபைல் போனை கண்டிப்பாக எடுத்து வரக் கூடாது. மீறி கொண்டு வந்தால், அவர்களின் மொபைல் போனை ஆசிரியர்கள் பறிமுதல் செய்து, மாணவனின் பெற்றோரை வரவழைத்து, எச்சரிக்க வேண்டும்.

மிக சரியான முடிவு!
பள்ளிகளுக்கு மொபைல் போன் கொண்டு வர தடைவிதித்தது, மிகச் சரியான முடிவு. தற்போது, 'ஸ்மார்ட் போன்' வந்துள்ளதால், அதில் பல வசதிகள் உள்ளன. 'கேம்ஸ்' ஆடுதல், 'வாட்ஸ் ஆப்'பில் வீடியோ, படம் அனுப்புதல், 'பேஸ்புக்' பார்த்தல் என ,வகுப்பறையில், மாணவர்கள் தேவையில்லாத வேலையில் ஈடுபடுகின்றனர்.

* மேலும், மொபைல் போன் காணாமல் போவதும், அதை விசாரிப்பதும், பள்ளி நேரத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஆசிரியர்கள், வகுப்பறை தவிர, மற்ற நேரத்தில் தேவையான விஷயங்களுக்கு மட்டும் பயன்படுத்தலாம்.பி.பேட்ரிக் ரைமண்ட் பொதுச் செயலர், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு

பெற்றோர் ஒத்துழைப்பு! :மொபைல் போன்கள் ஆக்க சக்தியாக இருந்தாலும், அதிலுள்ள அழிவுக்கான பாதைகளைத் தான், இளைய தலைமுறையினர் பயன்படுத்துகின்றனர். எனவே, பள்ளிகளில் மொபைல் போனுக்கு தடை விதிப்பது, தேவையான நடவடிக்கை. இதற்கு, பெற்றோர் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.ஆசிரியர்களும், மொபைல் போனில் நேரத்தை கழிக்காமல், அவற்றை ஓய்வறையில் வைத்து விட்டு, பள்ளிப்பணிகளை கவனிக்கலாம்.இடைவேளை நேரங்களில், அத்தியாவசிய தேவைக்கு பயன்படுத்தலாம்.சாமி. சத்தியமூர்த்தி, தலைவர்,தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்கம்

Comments

Popular posts from this blog