ஆசிரியர் படிப்பில் ஆர்வம் குறைகிறது இழுத்து மூடப்படும் இடைநிலை ஆசிரியர் பயிற்சி பள்ளிகள்.
போதிய மாணவர் சேர்க்கை இல்லாததால் ஏராளமான இடைநிலை ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் மூடும் நிலையில் உள்ளன. தமிழகம் முழுவதும் அரசு சார்பில் 29மாவட்ட அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், 38 அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள், 320 சுயநிதிஆசிரியர் பயிற்சி பள்ளிகள் உள்ளன. இவற்றில் மொத்தம் 13 ஆயிரம் இடங்கள் இருக்கின்றன. பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவிகள் இப்படிப்பில் சேர்க்கப்பட்டு இடைநிலைஆசிரியர் பணிக்கு (ஒன்றாம் வகுப்பு முதல்ஐந்தாம் வகுப்பு வரை) பணியமர்த்தப்பட்டு வந்தனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு பதிவுமூப்பு அடிப்படையில் ஆசிரியர் பணி வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சியடைந்தால்தான் ஆசிரியர் பணி என்ற தமிழக அரசின் அறிவிப்பால் ஆசிரியர் பயிற்சி படிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்தது. மேலும் இடைநிலைஆசிரியர் காலிப் பணியிடங்களும் மிகக் குறைந்த அளவே உள்ளதால் கடந்த சில ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர் பயிற்சிப் படிப்பிற்கு வரவேற்பு இல்லை.

அரசு சார்பில் தமிழகத்தில் ஏற்கனவே உள்ள 29 மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களுடன், இந்த ஆண்டு முதல் மேலும் மூன்று ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் தொடங்கப்பட உள்ளன. மொத்தமுள்ள 13 ஆயிரம் இடங்களுக்கு இதுவரை 3 ஆயிரத்து 510 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். போதிய மாணவர் சேர்க்கை இல்லாததால் ஆண்டுதோறும் தனியார் சுயநிதி இடைநிலை ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டும் சுமார் 50 பள்ளிகள் வரை மூடப்பட உள்ளன.

ஏற்கனவே ஆசிரியர் பயிற்சி படிப்பு முடித்தவர்கள் கூறுகையில், ‘‘தமிழகம் முழுவதும் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால் இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களும் மிகக்குறைவான அளவே ஆண்டுதோறும் ஏற்படுகின்றன. ஆசிரியர் பயிற்சி படிப்பு படித்தால் வேலை கிடைப்பது அரிது என்ற நிலையில், கூடுதலாக தகுதித் தேர்வு கொண்டுவரப்பட்டது. இத்தேர்வையும் அரசு ஆண்டுதோறும் முறையாக நடத்தவில்லை.

கடந்த சில ஆண்டுகளாக ஆசிரியர் பணி நியமனத்தில் ஏராளமான குழப்பங்கள் நடந்து வருகின்றன. இதனால், இடைநிலை ஆசிரியர் படிப்பு படிக்க யாரும் ஆர்வம் காட்டுவதில்லை,’’ என்றனர்.

Comments

Popular posts from this blog