TNTET:தகுதித்தேர்வு நிபந்தனை காத்திருக்கும் ஆசிரியர்கள்...

தமிழக அரசுப் பள்ளிகளில், 'டெட்' (ஆசிரியர் தகுதித்தேர்வு) நிபந்தனையுடன் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு காலஅவகாசம் நிறைவு பெறும் நிலையில், அரசின் முடிவை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் அறிவுறுத்தலின்படி, தமிழகத்தில், 'டெட்' தேர்வுக்கான நடைமுறைகள், 2010ல் அமல்படுத்தப்பட்டன. 2010 ஆக., 23ம் தேதிக்குபின், அரசுப் பள்ளிகளில் பணியில் சேர்ந்தவர்களுக்கு, 'டெட்' தேர்வு கட்டாயமாக்கப்பட்டது.

கடந்த, 2010ல், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பதிவு மூப்பு அடிப்படையில் அரசுப் பள்ளிகளில், ஒரே அரசாணை மற்றும் காலிப் பணியிடங்களை காண்பித்து, ஐந்து கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடந்தி, 3,665 பேர் பணியில் சேர்க்கப்பட்டனர். அந்த ஆண்டு மே மற்றும் ஆக., மாதம் நடந்த சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர்களுக்கு மட்டும் தேர்வில் இருந்து விலக்களிக்கப்பட்டது.

மற்ற, 1,665 பேர் தேர்ச்சி பெற, 2012 முதல் 2016 நவ.,மாதம் வரையான கால அவகாசத்தை தமிழக அரசு அளித்தது.
ஆனால், 2012, 2013ம் ஆண்டுகளுக்கு பின், 'டெட்' தேர்வுகுறித்து எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படாததால், ஆசிரியர்கள் குழப்பமடைந்துள்ளனர். 

தென்னக கல்விக்குழு ஒருங்கிணைப்பாளர் சந்துரு கூறுகையில், ''ஒரு சாராருக்கு மட்டும், 'டெட்' தேர்விலிருந்து விலக்களித்தது ஏற்புடையதல்ல. வழங்கப்பட்ட கால அவகாசத்தில், மூன்று ஆண்டுகள் தேர்வையும் அறிவிக்கவில்லை. பணியில் உள்ள நாங்கள், மருத்துவ விடுப்பு, மகப்பேறு விடுப்பு, ஊக்கத்தொகை, ஊதிய உயர்வு இன்றி தவித்து வருகிறோம். கால அவகாசம் முடிய, மூன்று மாதங்களே உள்ள நிலையில் அரசு எவ்வித முடிவை அறிவிக்குமோ? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது,'' என்றார்.

Comments

Popular posts from this blog