TET:ஆசிரியர் தகுதித்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என, நிபந்தனை ஆசிரியர்கள் முதல்வருக்கு மனு.

தகுதித்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என, நிபந்தனை ஆசிரியர்கள் முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளனர். ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் 2010 ஆக.23ம் தேதிக்குப் பிறகு, தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் முறையான ஒப்புதலுடன், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.

2016 நவ.23ம் தேதியுடன் இவர்களது பணி நிபந்தனைக்காலம் முடிவடைகிறது. இதனால் தங்கள் வேலை பறிபோய் விடுமோ என்ற கலக்கத்தில் உள்ளனர்.இவர்கள் கடந்த 6 ஆண்டுகளில் தொடர்ந்து சிறந்த பணியை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் நிபந்தனை ஆசிரியை-ஆசிரியர்கள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.

இம்மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: பணிக்கான தகுதிகாண் பருவமான 2 ஆண்டுகளையும் கடந்து பணியாற்றி வருகிறோம். எங்களுக்கு தகுதித்தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் வகையில் அரசு ஒரு தவிர்ப்பாணை வெளியிட்டால் போதும். இதனால் அரசுக்கு எவ்வித இழப்பும் ஏற்படப் போவதில்லை. யாருடைய பணி வாய்ப்புக்கும் இடையூறு இல்லாமல் தற்போதுள்ள நிலையிலேயே எங்களது பணியை அச்சமின்றி தொடரவும்,குழப்பங்கள் நீங்கி தெளிவடையவும் உதவும்.

தற்போதுள்ள சூழ்நிலையில் தகுதித்தேர்வு எழுதும் மனநிலையில் நாங்கள் நிச்சயமாக இல்லை.அப்படியே எழுதினாலும் பட்டதாரி ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான வினாத்தாளை பொறுத்தவரை, பட்டப்படிப்பில் அவரவர் படித்த பிரதான பாடப்பிரிவில் இருந்து சுமார் 10 மதிப்பெண்கள் மட்டும் பெறத்தக்க வகையில்தான் வினாக்கள் இடம்பெறுவதாலும், மீதம் 140 மதிப்பெண்களுக்கு பிரதான பாடப்பிரிவுக்கு அப்பாற்பட்ட பகுதியில் இருந்து வினாக்களாக இருப்பதாலும், தேர்ச்சி மதிப்பெண்ணான 90 பெறுவது மிகக்கடினம்.

ஒரு ஆசிரியராக தகுதிபெற கல்வியியல் (பி.எட்) பட்டம் என்பதே தகுதிக்குரியதாக இருக்கும் நிலையில், ஆசிரியர் தகுதித்தேர்வு ேதவையில்லை என்றே கருதுகிறோம்.அரசு, இதனை கொள்கை அறிவிப்பாக வெளியிட்டால் தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான பி.எட். பட்டதாரிகள் தங்களது வாழ்வாதாரத்தை பாதுகாத்துக்கொள்ள ஏதுவாக இருக்கும். கோரிக்கைகளை முதல்வரின் தனிப்பிரிவுக்கு ஏற்கனவே அனுப்பியும், எங்களது எதிர்பார்ப்பு ஒன்றுகூட கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேறவில்லை.

தற்போது மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றுள்ள தாங்கள், தகுதித்தேர்வு எழுதுவதில் இருந்து முழுமையாக விலக்கு அளித்துஎங்களை காப்பாற்ற வேண்டும். நடைபெற உள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் எங்களுக்கு சாதகமான அறிவிப்பை வெளியிட வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

Comments

Popular posts from this blog