14 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு: அமைச்சர்!

தமிழக சட்டப்பேரவையில் இன்று கைத்தறி, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை மானிய கோரிக்கைமீதான விவாதம் நடைபெற்றது.

இதில், தொழிலாளர் நல வாரியம் குறித்த தா.மோ.அன்பரசன் எழுப்பிய கேள்விக்கு, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் பதிலளித்துப் பேசுகையில், தமிழகத்தில் தொழிலாளர் நல வாரியத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு சுமார் 600 கோடி ரூபாய் செலவில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

மற்றொரு கேள்விக்குப் பதிலளிக்கையில், தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 1 லட்சத்து 42 ஆயிரத்து 114 பேருக்கு தனியார் நிறுவனங்களிலும், இதர நிறுவனங்கள் என மொத்தமாக இதுவரை 5 லட்சத்து 14 ஆயிரத்து 313 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், 15 மாவட்டங்களில் நடத்தப்பட்ட சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள்மூலம் 59 ஆயிரத்து 232 பேருக்கு வேலை கிடைத்துள்ளது.

‌ தமிழகம் முழுவதும் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 83 லட்சத்து 38 ஆயிரம்பேர் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 60 சதவிகிதம்பேர் உயர்கல்வி பயிலும் மாணவர்கள். ஆகவே, வேலைவாய்ப்பின்மை இல்லாத நிலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் நிலோபர் கபில் தெரிவித்தார்.

நத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆண்டி அம்பலம், உயர்கல்வித்துறை தொடர்பான கேள்விக்குப் பதிலளித்து உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசுகையில், கடந்த 5 ஆண்டுகளில், உயர் கல்வியில் தமிழகத்தில் 959 புதிய பாடத் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. ஏழை, எளிய மாணவர்கள் கல்வி பெற வேண்டும் என்றநோக்கில் கிராமப்புறங்களை கருத்தில் கொண்டு, 62 புதிய கல்லூரிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் இந்திய அளவில், உயர் கல்வியில் மாணவர்களின் சேர்க்கை விகிதம் 22.7 சதவிகிதமாக இருந்தபோதிலும், தமிழகத்தைப் பொருத்தவரையில், உயர் கல்வியில் மாணவர் சேர்க்கை 44.8 சதவிகிதமாகவும், மாணவிகளின் சேர்க்கை 42.7 சதவிகிதமாகவும் அதிகரித்துள்ளது. இதன்விளைவாக, இந்திய அளவில் உயர்கல்வியில் தமிழகம் முதல் மாநிலமாக உள்ளது என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog