தேர்வு வாரியத்தால் தாமதம் 2,316 சிறப்பாசிரியர், முதுகலை ஆசிரியர் பணிக்கு தேர்வு எப்போது?

மாநிலம் முழுவதும் அரசு பள்ளிகளில் 2,316 சிறப்பு ஆசிரியர் மற்றும் முதுகலை ஆசிரியர்களை தேர்வு செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் தாமதித்து வருகிறது. இந்த தேர்வு எப்போது நடக்கும் என்று ஆசிரியர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்சிப் பள்ளி விரிவுரையாளர்கள். முதுநிலை விரிவுரையாளர்கள், உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆகியோர் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர்.

இந்நிலையில் 1,254 சிறப்பு ஆசிரியர்கள் (தையல், ஓவியம், உடற்கல்வி, இசை ஆசிரியர்கள்) பணியிடங்கள், 1,062 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் என மொத்தம் 2,316 பணியிடங்களை போட்டித் தேர்வு மூலம் நிரப்ப பள்ளி கல்வித்துறை கடந்தாண்டு முடிவு செய்தது.

இதற்கு பாடப்பிரிவு வாரியாக காலியிடங்கள் பட்டியலும் ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் உடனடியாக ஒப்படைக்கப்பட்டது. இதில் சிறப்பாசிரியர் பாடப்பிரிவில் உடற்கல்வி ஆசிரியர் பணியில் மட்டும் 632 காலியிடங்கள் உள்ளன. ஆனால் காலியிடங்கள் பட்டியல் கொடுக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும், போட்டித் தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு, விண்ணப்ப விநியோகம் போன்ற ஆயத்தப்பணிகள் கூட இன்னும் தொடங்கப்படவில்லை. இந்த மாதம் அடுத்த மாதம் என தள்ளி போடுகின்றனர்.

இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில், சிறப்பு ஆசிரியர், முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கான அரசாணை வெளியிடப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் தேர்வுக்கான அறிவிப்பு எப்போது வெளியாகும் என பி.எட். பட்டம் முடித்த முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், தையல், ஓவியம், இசை, உடற்கல்வி ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் என்றனர்.

Comments

Popular posts from this blog