மின் வாரிய பணியாளர் தேர்வு முடிவு வெளியாவது எப்போது?

மின் வாரியத்தில் உதவியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்வு எழுதிய பட்டதாரிகள், முடிவை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தமிழ்நாடு மின் வாரியத்தில், 50 ஆயிரம் பணி இடங்கள் காலியாக உள்ளதால், பல பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், இளநிலை உதவியாளர், 'டைப்பிஸ்ட்' உட்பட, 2,175 பணி இடங்களை, எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் நிரப்ப, மின் வாரியம் முடிவு செய்தது. இப்பதவிகளுக்கான எழுத்து தேர்வு, அண்ணா பல்கலை மூலம், ஜூன், ஆகஸ்ட் மாதங்களில் நடத்தப்பட்டது; இதுவரை, தேர்வு முடிவு வெளியிடப்படவில்லை.

இது குறித்து, தேர்வு எழுதியவர்கள் கூறியதாவது: எழுத்து தேர்வு அறிவிப்பை, மின் வாரியம் பிப்ரவரியில் வெளியிட்டது. ஆனாலும், சட்டசபை தேர்தல் காரணமாக, ஐந்து மாதம் தாமதமாக தேர்வை நடத்தியது. அரசு நிறுவனங்கள், ஊழியர்களை தேர்வு செய்யும் போது, விண்ணப்பித்தவர்கள், பங்கேற்றவர்கள் விபரங்களை வெளியிடுவது வழக்கம். ஆனால், மின் வாரியம், அந்த விபரங்களை வெளியிடவில்லை; தேர்வு முடிவையும் வெளியிடவில்லை. இந்த தாமதத்தால், முறைகேடு நடக்க வாய்ப்புள்ளதாக சந்தேகம் எழுகிறது. எனவே, தேர்வு முடிவை விரைவாக வெளியிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


ஏ.இ., தேர்வில் ஏமாற்றம் : மின் வாரியம், எலக்ட்ரிகல், சிவில், மெக்கானிக்கல் பிரிவுகளில், 375 உதவி பொறியாளர்களை நியமிக்க, ஜனவரியில் எழுத்து தேர்வை நடத்தியது. இது தொடர்பான வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி, மதிப்பெண் மட்டும் வெளியிட்டது; வழக்கு முடியாததால், மற்ற விபரங்கள் வெளியாகவில்லை.

Comments

Popular posts from this blog