பள்ளி கல்வித்துறை மவுனம் : 'TET' தேர்வு குழப்பம் நீடிப்பு

ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வில், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு விலக்கு வழங்குவது குறித்து, பள்ளிக் கல்வித்துறை முடிவு எடுக்காததால், ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வு, ஏப்., 29, 30ல் நடக்கிறது. தேர்வுக்கான விண்ணப்பங்கள், மார்ச், 23 வரை பெறப்பட்டு, பரிசீலனை நடக்கிறது.


 'இந்த தேர்வில், அரசு பள்ளி ஆசிரியர்களாக, 2010 ஆக., 23க்கு பின் நியமனம் பெற்றவர்கள், தேர்ச்சி பெற வேண்டும். இல்லாவிட்டால், அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவர்' என, பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்கு, அரசு பள்ளி ஆசிரியர்கள் தரப்பில் எதிர்ப்பு எழுந்தது. தமிழகத்தில், 2011 நவ., 15ல் தான், 'டெட்' தேர்வே அறிமுகமானது. அப்படியிருக்கையில், அதற்கு முன் பணி நியமனம் பெற்றவர்களுக்கு, 'டெட்' தேர்வு எப்படி கட்டாயமாகும் என, ஆசிரியர் சங்கத்தினர் கேள்வி எழுப்பியுள்ளனர். இதுதொடர்பாக, பள்ளிக் கல்வி செயலர் மற்றும் இயக்குனர் ஆகியோருக்கு, பல்வேறு சங்கத்தினர் மனு அளித்து உள்ளனர். அதற்கு, கல்வித் துறை அதிகாரிகள், விளக்கமளிக்கவில்லை. 

பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொது செயலர் பேட்ரிக் ரைமண்ட் கூறியதாவது: சிறுபான்மை அந்தஸ்து பெற்ற, பள்ளி ஆசிரியர்களுக்கு, 'டெட்' தேர்ச்சி தேவையில்லை என, உச்ச நீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது. அரசாணைக்கு முந்தைய தேதியில், பணி நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு, 'டெட்' தேர்ச்சியை கட்டாயம் ஆக்க முடியாது. அவர்களுக்கு, ஆண்டுக்கு ஒரு முறை புத்தாக்க பயிற்சி வகுப்பு நடத்தி கொள்ளலாம் என்றே கூறப்பட்டுள்ளது.எனவே, 2010 ஆகஸ்ட்டுக்கு பின், 2011 நவம்பருக்கு முன் நியமிக்கப்பட்ட, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

Comments

Popular posts from this blog