ஆய்வக உதவியாளர் பணி : அனுபவ சான்றிதழுக்கு பணம்

ஆய்வக உதவியாளர் பணிக்கு, அனுபவ சான்றிதழ் வழங்க, பள்ளி, கல்லுாரிகளில் ஆயிரக்கணக்கில் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.

அரசு பள்ளிகளில், 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப, 2015 மே, 30ல் தேர்வு நடந்தது. எட்டு லட்சம் பேர் பங்கேற்ற தேர்வின் முடிவுகள், மார்ச், 24ல் வெளியாயின. தேர்ச்சி பெற்றவர்களுக்கு, ஏப்., 9 முதல், 11 வரை, மாவட்ட கல்வி அலுவலகங்கள் மூலம், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. ஒவ்வொரு சான்றிதழுக்கும், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்கப்படுகிறது. 



எழுத்துத் தேர்வுக்கு, 150; வேலைவாய்ப்பு பதிவு மூப்பு, 10; கூடுதல் கல்வித் தகுதிக்கு, 5; பிளஸ் 2 என்றால், 2; இளநிலை பட்டம் மற்றும் அதற்கு மேல், 3 மதிப்பெண் வழங்கப்படும். ஆய்வக உதவியாளராக பணிபுரிந்த அனுபவம் இருந்தால், 2 மதிப்பெண்கள் வழங்கப்படும். மொத்தம், 167 மதிப்பெண்களுக்கு கணக்கிடப்படும்.

 பணி அனுபவத்துக்கு, அங்கீகாரம் பெற்ற அரசு, தனியார் பள்ளி, கல்லுாரிகளில், 2015, மே, 6க்குள் பணிபுரிந்தால், அந்த அனுபவ காலம் கணக்கிடப்படும். இதற்கு, பள்ளி மற்றும் கல்லுாரிகளிலும், மாவட்ட கல்வி அதிகாரி, கல்லுாரி கல்வி இணை இயக்குனர் ஆகியோர் சான்றிதழ் அளிக்க வேண்டும். 

எனவே, தேர்வுக்கு விண்ணப்பித்த பலர், வேலை பார்க்காமலேயே, அனுபவ சான்றிதழ் பெற்று வருகின்றனர். பல பள்ளி, கல்லுாரிகளில், சான்றிதழ் கேட்டு வருவோருக்கு, தொகுப்பூதியத்திலும், தினக்கூலி அடிப்படையிலும், ஆய்வக உதவியாளராக பணிபுரிந்ததாக, போலி சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த சான்றிதழை வழங்க, பள்ளி, கல்லுாரி பொறுப்பாளர்கள், தலைமை ஆசிரியர்கள், அதிகாரிகள் ஆகியோர், 10 ஆயிரம் ரூபாய் முதல், 50 ஆயிரம் ரூபாய் வரை, வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. 

Comments

Popular posts from this blog