பி.எட்., கல்லூரிகளில் தில்லுமுல்லு : கல்வியியல் பல்கலை அதிரடி முடிவு

பி.எட்., கல்லுாரிகளில் தகுதி இல்லாத முதல்வர்கள் இருப்பதால், அவர்களின் கல்வித் தகுதியை ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க, ஆசிரியர் கல்வியியல் பல்கலை முடிவு செய்துள்ளது. 

பட்டதாரிகள், ஆசிரியர் பணியில் சேர வேண்டும் எனில், பி.எட்., படிப்பை முடித்திருப்பதோடு, ஆசிரியர் தகுதி தேர்விலும், கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

கண்காணிப்பு : நாடு முழுவதும் உள்ள, பி.எட்., படிப்புக்கான கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளுக்கு, என்.சி.டி.இ., என்ற, தேசிய கல்வியியல் கவுன்சில் அங்கீகாரம் வழங்குகிறது. 

தமிழகத்தில், என்.சி.டி.இ., அங்கீகாரம் பெற்ற கல்லுாரிகளுக்கு, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை மூலம் இணைப்பு அந்தஸ்து வழங்கப்படும். இதனால், பல்கலையின் முழு கட்டுப்பாட்டில், கல்லுாரிகள் செயல்பட வேண்டும். மாணவர்கள் சேர்க்கை, ஆசிரியர்கள் நியமனம், உள்கட்டமைப்பு வசதிகள் போன்றவற்றை, ஆசிரியர் கல்வியியல் பல்கலை கண்காணிக்கும்.

இந்நிலையில், பி.எட்., கல்லுாரிகளில் நடக்கும் முறைகேடுகள் குறித்து, கல்வியியல் பல்கலைக்கு புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. அதனால், துணைவேந்தர் தங்கசாமி மற்றும் பதிவாளர் ரவீந்திரநாத் தாகூர் ஆகியோர், சீரமைப்பு நடவடிக்கைகளை துவங்கி உள்ளனர்.

தர மதிப்பீடு : அதாவது, அனைத்து பி.எட்., கல்லுாரிகளும், அங்கீகாரம் பெற்ற ஐந்து ஆண்டுகளுக்குள், 'நாக்' தர மதிப்பீடு பெற வேண்டும். அத்துடன், அனைத்து கல்லுாரிகளிலும், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு, 'பயோ மெட்ரிக்' வருகைப் பதிவை கட்டாயமாக்க வேண்டும் என, உத்தரவிட்டுள்ளனர். இதை தொடர்ந்து, பி.எட்., கல்லுாரிகளில் முதல்வர்களின் கல்வித் தகுதியை ஆய்வு செய்து, போலிகளை கண்டுபிடிக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. பி.எட்., கல்லுாரிகளில், கல்வியியல் படிப்பில், பிஎச்.டி., முடித்தவர்கள் மட்டுமே, முதல்வராக இருக்க முடியும்.பல கல்லுாரிகளின் முதல்வர்கள், இந்தவரையறைக்குள் இல்லை என, தெரியவந்துள்ளது. எனவே, விரைவில், அந்த முதல்வர்கள் மீது நடவடிக்கை எடுக்க, பல்கலை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

Comments

Popular posts from this blog