1, 6, 9, 11-ம் வகுப்பு பாடப்புத்தகங்களை ‘லேமினேசன்’ செய்ய அரசு ஆலோசனை

புதிய பாடத்திட்டத்தின் கீழ் அச்சடிக்கப்பட்ட 1, 6, 9, 11-ம் வகுப்பு பாடப்புத்தகங்களை ‘லேமினேசன்’ செய்ய அரசு ஆலோசனை செய்துவருவதாக அதிகாரி தெரிவித்தார்.

தமிழகத்தில் பள்ளி பாடத்திட்டம் பல ஆண்டுகளாக மாற்றப்படாததால், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மு.அனந்தகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் புதிய பாடத்திட்டத்தை தயாரித்தனர். அதன்படி 2018-2019-ம் கல்வி ஆண்டு முதல் 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.

மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனர் க.அறிவொளி புதிய பாடப்புத்தகங்களின் சி.டி.யை அனுப்ப தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழகத்தில் அச்சடிக்கப்பட்டு வருகிறது. அதன் நிர்வாக இயக்குனர் ஜெகன்நாதன் மற்றும் செயலாளர் பழனிசாமி இந்த பணிகளை கவனித்து வருகிறார்கள்.

இதுகுறித்து தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:

வருகிற கல்வி ஆண்டில் மாணவ-மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கும் நாளில் பாடப்புத்தகங்களை வழங்க ஏதுவாக 2, 3, 4, 5, 7, 8, 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் ஏற்கனவே அச்சடிக்கப்பட்டு அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு விட்டன.

இப்போது புதிய பாடத்திட்டத்தின் கீழ் உள்ள பாடப்புத்தகங்கள் அச்சடிக்கப்படுகிறது. இதில் ஏற்கனவே உள்ள புத்தகத்தைவிட அதிக பக்கங்கள் இருக்கும். நிறைய படங்கள் சேர்க்கப்பட்டுள்ளதே இதற்கு காரணம். 9 மற்றும் 11-ம் வகுப்பில் வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையிலான பாடங்கள் உள்ளன. பாடப்புத்தகங்கள் அனைத்தும் பள்ளிகள் திறக்கும் முன்பாக அனுப்பப்பட்டுவிடும்.

பக்கங்கள் அதிகமாக இருப்பதால் புத்தகங்கள் பிரிந்துபோகாமல் இருக்க முன்பைவிட கனமான, பளபளப்பான அட்டையால் பைண்டிங் செய்யப்படுகிறது. புத்தகங்களை ‘லேமினேசன்’ செய்தால் பக்கங்கள் பிரிந்துபோகாது என்பதால் லேமினேசன் செய்து வழங்கலாமா? என்று அரசு ஆலோசித்து வருகிறது.

இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog