ஆசிரியர்கள் தகுதித் தேர்வுஎழுதுவதற்கான கால அவகாசம் முடிய உள்ளதால் 30 ஆயிரம் ஆசிரியர்களின் வேலைக்கு ஆபத்து!

தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தகுதித் தேர்வு எழுதுவதற்கான கால அவகாசம் முடிய உள்ளதால் 30 ஆயிரம் ஆசிரியர்களின் வேலைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

கடந்த 2009ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஆசிரியர் பணி செய்ய தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டது.
இந்த சட்டம் அனைத்து மாநிலங்களிலும் 2009 நவம்பர் மாதம் அமலுக்கு வந்தது. 

தமிழகத்தில் இந்த சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித் தேர்வு எழுத வேண்டும் என்று தமிழக அரசு ஆணையிட்டது.  மேற்குறிப்பிட்ட ஆண்டில் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் தங்களுக்கு விதி விலக்கு வேண்டும் என்று தமிழக அரசிடம் கேட்டனர். பின்னர் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கில் 2015ம் ஆண்டு வரை தகுதித் தேர்வு எழுத நீதிமன்றம் அவகாசம் அளித்தது. மீண்டும் 2019 மார்ச் வரை அவகாசம் அளிக்கப்பட்டது. இந்த அவகாசம் வரும் மார்ச் மாதத்துடன்  முடிவடைய உள்ளது.  இந்நிலையில், கட்டாய கல்வி உரிமைச் சட்டம் தமிழகத்தில் அமலுக்கு வந்த பிறகு இதுவரை 3 முறைதான் தகுதித் தேர்வு நடந்துள்ளது. அதற்கு பிறகு தகுதித் தேர்வு நடத்தப்படவில்லை.

இந்த ஆண்டு தகுதித் தேர்வு நடப்பதாக அரசு அறிவித்தது. ஆனால், 2018ம் ஆண்டும் முடிந்துவிட்டது. நீதிமன்றம் வழங்கிய அவகாசம் மார்ச் மாதம் முடிய உள்ள நிலையில், எப்போது தகுதித் தேர்வு நடக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.இருப்பினும், கடந்த 2009ம் ஆண்டு பணியில் சேர்ந்த இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் சுமார் 30 ஆயிரம் பேர் தகுதித் தேர்வு எழுத வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

2019ம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் தகுதித் தேர்வை நடத்தும்பட்சத்தில் மேற்கண்ட 30 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்வு எழுத வேண்டுமா அல்லது அவர்களுக்கு விலக்கு அளிக்கப்படுமா என்பது குறித்து அரசு விளக்கம் அளிக்கவில்லை. தகுதித் தேர்வில் மேற்கண்ட ஆசிரியர்கள் தோல்வி  அடைந்தால் அவர்கள் வேலை பறிபோகும் நிலை உள்ளது. இதனால் ஆசிரியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

Comments

Popular posts from this blog