TET தேர்வு எழுதியவருக்கு கூடுதலாக ஒரு மதிப்பெண் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு!


‘வந்தேமாதரம்’ பாடல் கேள்விக்கு விடை எழுதிய வழக்கு: ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியவருக்கு கூடுதலாக ஒரு மதிப்பெண்

தஞ்சாவூரைச் சேர்ந்த கிளான் தினேஷ்குமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

நான் பி.ஏ. ஆங்கில இலக்கியம் மற்றும் பி.எட். முடித்து உள்ளேன். கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 18-ந்தேதி,ஆசிரியர் தகுதித் தேர்வின் 2-ம் தாள் தேர்வு எழுதினேன்.அதில் நான் 81 மதிப்பெண் பெற்றேன்.

மேலும் நான் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவன். அப்போது தமிழகஅரசு வெளியிட்ட அரசாணையின்படி 82 மதிப்பெண் பெற்றால் ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 2-ல் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு இருப்பேன். ஒரு மதிப்பெண் குறைவாக பெற்றதால் இந்த தேர்வில் தேர்ச்சி பெறாமல் உள்ளேன்.

மேலும் அதில் ‘வந்தே மாதரம்’ பாடல் முதன் முதலில் எந்த மொழியில் எழுதப்பட்டது என்ற கேள்விக்கு, வங்க மொழியில் எழுதப்பட்டது என்பது தான் சரியான பதில். ஆனால் ஆசிரியர் தேர்வு வாரியம் வழங்கிய விடைத்தாளில் சமஸ்கிருதம் என்ற பதில் எழுதியவர்களுக்கு மதிப்பெண் வழங்கியுள்ளது. இது தவறு. அந்த ஒரு மதிப்பெண்ணால் நான் தேர்ச்சி பெறாமல் உள்ளேன். என்னை போல சரியான விடை எழுதிய பலர், ஐகோர்ட்டு உத்தரவுப்படி மதிப்பெண் பெற்றுள்ளனர். எனவே அந்த கேள்விக்கு சரியான பதில் எழுதிய எனக்கு ஒரு மதிப்பெண் வழங்கவும், ஆசிரியர் தகுதித்தேர்வில் நான் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கவும் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி சுரேஷ்குமார் முன்புவிசாரணைக்கு வந்தது. முடிவில், ஆசிரியர் தகுதி தேர்வு எழுதிய மனுதாரருக்கு ஒரு மதிப்பெண் கூடுதலாக வழங்க வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு நீதிபதிஉத்தரவிட்டார்.

மேலும் இந்த மதிப்பெண்ணை கொண்டு மனுதாரர் வேலை வாய்ப்பு கோர முடியாது. தகுதித்தேர்வில்தேர்ச்சி பெற்றதாக மட்டுமே அறிவிக்கப்படும் எனவும் நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

Comments

Popular posts from this blog