பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் வெளிமாநிலத்தவர்கள்.. தமிழக அரசுக்கு வேல்முருகன் முக்கிய கோரிக்கை

 

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 1,060 பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் வெளிமாநிலத்தவர்கள் பங்கேற்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது


இது தொடர்பாக அந்த கட்சியின் தலைவர் வேல்முருகன் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாட்டில் காலியாக உள்ள 1,060 பாலிடெக்னிக் விரிவுரையாளர் காலிப் பணியிடங்களுக்கு தேர்வு வரும் 8 முதல் 12ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தேர்வை, ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 140 பேர் தேர்வு எழுதுகின்றனர்.


தமிழ்நாடு அரசு ஒத்தி வைத்தது

கடந்த 2017 ஆம் ஆண்டு, இதே பணியிடங்களுக்காக நடந்த தேர்வில், தமிழ் தெரியாத வெளி மாநிலத்தவர் பெருமளவில் தேர்வானதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி அம்பலப்படுத்தியதோடு, வெளி மாநிலத்தவரை நீக்கிவிட்டு புதிய பட்டியலை வெளியிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தது.

இதனையடுத்து, வெற்றி பெற்றோருக்கு 2017 நவம்பர் 23 அன்று நடக்கவிருந்த சான்றிதழ் சரிபார்ப்பை தமிழ்நாடு அரசு ஒத்தி வைத்தது.


வேதனையளிக்கிறது

இவ்விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் தலையிட்ட பின்னர், அத்தேர்வை இரத்து செய்ததுடன் முறைகேட்டில் ஈடுபட்டோர் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. கொரோனா முடக்கம் காரணமாக கடந்த இரண்டாண்டுகளாக நடைபெறாத அத்தேர்வு, வரும் 8 முதல் 12 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வெளி மாநிலத்தவர் பங்கேற்பால் ஏற்கெனவே ரத்தாகி, இரண்டாம் முறையாக நடைபெறும் அத்தேர்வில் மீண்டும் வெளி மாநிலத்தவர்கள் பங்கேற்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது மிகவும் வேதனையளிக்கிறது.


அரசாணை

வெளி மாநிலத்தவர்கள் அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் விரிவுரையாளர்களாகத் தேர்வானால், கிராமப்புறங்களில் தமிழ்வழியில் படித்துவிட்டு பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் சேரும் தமிழ் மாணவர்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்படுவர். தமிழ் மாணவர்களின் வேலை வாய்ப்பும் பறிபோகும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்து எச்சரித்து வருகிறது. தற்போது, தமிழ்நாட்டின் அனைத்து நிலை போட்டி தேர்வுகளுக்கும் தமிழ் மொழிப் பாடத்தை கட்டாயமாக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


தடுத்து நிறுத்த வேண்டும்.

 


எனவே, இந்த அரசாணை வரும் 8 முதல் 12 ஆம் தேதி வரை நடைபெற உள்ள பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்விற்கும் பொருந்தும் வகையில் வழிவகுக்க வேண்டும் என்றும் இதற்கான அறிவிப்பாணையை தேர்வுக்கு முன்னர் வெளியிட வேண்டும். இத்தேர்வில் வெளி மாநிலத்தவர் பங்கேற்பதைத் தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.


கர்நாடகா, உத்தரப்பிரதேசம்

கர்நாடகா, உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்களில், மண்ணின் மக்கள் மட்டுமே அரசுத் தேர்வெழுத முடியும் என்ற நிலை உள்ளது. இதுபோன்று, தமிழ்நாட்டில் வந்தரெல்லாம் தேர்வெழுதலாம் என்ற விதியையும் மாற்ற தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog