அர்ச்சகர்களுக்கான பயிற்சி பள்ளியில் ஆசிரியர் நியமனம்: இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு.

 


திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் சைவ அர்ச்சகர்களுக்கான பயிற்சி பள்ளியில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆகம ஆசிரியர் தேர்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் கடந்த மானியக் கோரிக்கையின் போது சாதி வேறுபாடின்றி அர்ச்சகர்களை உருவாக்கும் இந்து சமய அறநிலையத்துறையின் ஆறு அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் ரூபாய் 1 கோடியே 50 இலட்சம் செலவில் மேம்படுத்தப்படும் என்று அறிவித்தார்கள்.



அந்த தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் உள்ள திருக்கோயில்களில் உரிய பயிற்சியும், தகுதிகளும் உடைய இந்துக்களில் அனைத்து சாதியனரும் சாதி வேறுபாடின்றி அர்ச்சகராக நியமனம் பெறுவதற்கு மேற்கண்ட அறிவிப்பின்படி சைவ, அர்ச்சகர் ஓராண்டு சான்றிதழ் பயிற்சி வழங்கும் பொருட்டு பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் ஆகம ஆசிரியர் பணியிடங்களில் நியமனம் பெற உரிய சான்றிதழ்களின் நகல்களுடன் விண்ணப்பிக்கலாம் என்று துறையின் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் தமிழில் முதுநிலை பட்டமும், பட்டதாரி ஆசிரியர் பயிற்சியும் பெற்றிருத்தல் வேண்டும்.

இந்து சமய இலக்கியங்களிலும் தமிழகத் திருக்கோயில்கள் வரலாற்றிலும் போதிய கற்றறிவு பெற்றிருத்தல் வேண்டும், பல்கலைக் கழகம் மேல்நிலைப்பள்ளி ஆகிய ஏதேனும் ஒன்றில் தமிழாசிரியராக குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுக் காலம் பணியாற்றிய அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும். தலைமை ஆசிரியருக்கு தொகுப்பு ஊதியமாக மாதம் ஒன்றுக்கு ரூ. 35,000/-, ஆகம ஆசிரியருக்கு தொகுப்பு ஊதியமாக மாதம் ஒன்றுக்கு ரூ. 30,000/- வழங்கப்படும். மேலும், விண்ணப்பதாரர்கள் 01.01.2022 அன்று 35 வயது நிரம்பாதவராக இருத்தல் வேண்டும். மேலும், இந்து சமயத்தவராகவும் பின்பற்றுபவராகவும், சைவ சமயக் கோட்பாடுகளைக் கடைபிடிப்பவர்களாகவும் இருத்தல் வேண்டும்.


நியமனங்கள் தேர்வுக் குழுவின் முடிவிற்குட்ப்பட்டவை, விண்ணப்ப படிவம் திருக்கோயில் அலுவலகத்தில் நேரிலோ அல்லது என்ற திருக்கோயில் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 20.01.2022, இணை ஆணையர் / செயல் அலுவலர், அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் திருவண்ணாமலை என்ற முகவரிக்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Comments

Popular posts from this blog