பொதுத்துறை பணியிடங்களும் குரூப் 2, குரூப் 4 தேர்வில் சேர்ப்பு..



தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்கள், அலுவலர்கள் ஆகியோரை தேர்வு செய்கிறது.


இதற்காக குரூப் 1, குரூப் 2, குரூப் 2ஏ, குரூப் 3, குரூப் 4 தேர்வுகள் நடத்தப்படுகின்றன.


தொழில்நுட்ப பணிகள் தொடர்பான காலியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி தனித்தனியே தேர்வுகளை நடத்தி வருகிறது குரூப் 4 போட்டி தேர்வானது பத்தாம் வகுப்பு கல்வித் தகுதியை கொண்ட பணிகளுக்கும், குரூப் 2, குரூப் 2ஏ, குரூப் 1 தேர்வுகள் பட்டப்படிப்பை அடிப்படை தகுதியாக கொண்ட பதிவுகளுக்கும் நடத்தப்படுகின்றன.


இதில் உதவி பொறியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு பி.இ, பி.டெக் படிப்பு கல்வி தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்றும் வேளாண் அலுவலர் பதவிக்கு பிஎஸ்சி விவசாயம், தோட்டக்கலை அலுவலர் பணிக்கு பிஎஸ்சி தோட்டக்கலை, உதவி தொழிலாளர் ஆணையம் பதவிக்கு பட்டயப் படிப்புடன் தொழிலாளர் நலன் தொடர்பான டிப்ளமோ படிப்பு ஆகியவை கல்வித் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


தற்பொழுது தமிழ்நாடு மின்சார வாரியம், வீட்டு வசதி வாரியம், ஆவின், மாநகர போக்குவரத்து கழகம் உட்பட மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் பணியாளர்களையும் டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அண்மையில் நடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் சட்ட மசோதாவும் நிறைவேற்றப்பட்டுள்ளது.


இந்நிலையில் பொதுத்துறை நிறுவனங்கள் தங்களுக்கு தேவைப்படும் பணியாளர்களை தாங்களாக அறிவிப்பு வெளியிட்டு தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு நடத்தி ஆட்களை தேர்வு செய்கின்றனர். இனி இந்த‌ பணியிடங்களும் டிஎன்பிஎஸ்சி மூலமாக நிரப்பப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.


பொதுத்துறை நிறுவனங்களின் காலி பணியிடங்களை ஒவ்வொரு பதவியின் கல்வித் தகுதிக்கு ஏற்ப குரூப் 4, குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகளுடன் இணைத்து நடத்தவும் தொழில்நுட்ப கல்வி உட்பட குறிப்பிட்ட கல்வித் தகுதி உடைய பதவிகளுக்கு தனியாக தேர்வுகளை நடத்தவும் டிஎன்பிஎஸ்சி திட்டமிட்டு உள்ளது.


அந்தவகையில் பொதுத்துறை நிறுவனங்களுக்கு தேவையான இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் போன்ற பதவிகள் குரூப்-4 தேர்வுடனும் உதவியாளர் மற்றும் அதற்கு இணையான பதவிகள் ஊதிய நிலைக்கேற்ப குரூப்-2 அல்லது குரூப்-2ஏ தேர்வுடனும் சேர்க்கப்படும். இந்தத் தேர்வுகளுக்கு நேர்முகத் தேர்வு கிடையாது.மேலும் இந்த தேர்வுகளுக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் இதன் மூலம் 5831 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று டிஎன்பிஎஸ்சி ஏற்கனவே அறிவித்துள்ளது. அதேபோல குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் இத்தேர்வின் மூலம் 5255 காலியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog