ஆசிரியர்களை நியமிக்கக்கோரி பள்ளி முன்பு மாணவர்கள்,பெற்றோர் 100-க்கும் மேற்பட்டோர் போராட்டம்




சத்தியமங்கலம் அருகே கூடுதலாக ஆசிரியர்களை நியமிக்கக்கோரி பள்ளி முன்பு மாணவர்கள், பெற்றோர் 100-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள சிக்கரசம்பாளையம் அரசு தொடக்கப்பள்ளியில் அப்பகுதி சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 175 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.


ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள இந்த தொடக்கப்பள்ளியில் 2 ஆசிரியர்கள் மட்டுமே தற்போது பணிபுரிந்து வருகின்றனர். மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்கள் சரிவர கல்வி கற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


இதுகுறித்து சிக்கரசம்பாளையம் பகுதி பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியரின் பெற்றோர் பள்ளிக் கல்வித்துறை அலுவலர்களிடம் கூடுதலாக ஆசிரியர்களை நியமிக்கக்கோரி கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.


இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் கிராமமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று காலை பள்ளியின் முன்பு கூடுதலாக ஆசிரியர்களை நியமிக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இதுகுறித்து தகவலறிந்த சத்தியமங்கலம் தாசில்தார் ரவிசங்கர், டிஎஸ்பி ஜெயபாலன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவியரின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.


பள்ளிக்கல்வித்துறை அலுவலர்களிடம் பேசி கூடுதலாக ஆசிரியர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதைத்தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவியர் பள்ளிக்குச் சென்றனர். அரசு பள்ளி முன்பு பெற்றோர் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Comments

Popular posts from this blog