ஆசிரியர்களின் ஊதிய சிக்கலைத் தவிர்க்க பள்ளிக்கல்வித்துறை அறிமுகப்படுத்திய புதிய முறை!







பொது மாறுதல் கலந்தாய்வில் பணியிட மாறுதல், பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்களுக்கு ஊதியம் பெற்று வழங்குவதில் உள்ள நடைமுறை சிக்கலைத் தவிர்த்திடும் பொருட்டு உரிய ஆணைகள் பெற்ற அனைத்துவகை ஆசிரியர்களும் பிப்ரவரி 28ஆம் தேதி மாலையில் பணி விடுப்பு செய்து, மார்ச் 1ஆம் தேதி பணியில் சேர வேண்டும் எனப் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.


தமிழ்நாட்டில் அரசுப்பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த கலந்தாய்வு முழுவதும் கல்வித் தகவல் மேலாண்மை முறைமை என்ற இணையதளத்தின் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.


இந்தநிலையில் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் இன்று (பிப்.23) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "2021-22ஆம் கல்வியாண்டிற்கு அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு அரசின் நெறிமுறைகளின்படி நடைபெற்று வருகிறது.


இந்தக் கலந்தாய்வில் பங்கேற்பதற்காக ஆசிரியர்களுக்கு மாறுதல்கள், பதவி உயர்வுகள், பணிநிரவல் கால அட்டவணை வெளியிடப்பட்டு கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.


இந்த கலந்தாய்வில் கலந்து கொண்டு மாறுதல்கள், பதவி உயர்வுகள், பணி நிரவல் உத்தரவினை பெற்ற அனைத்து வகை ஆசிரியர்களும் 24ஆம் தேதி பணியில் இருந்து விடுவிக்க அறிவுரை வழங்கப்பட்டது.


இந்த நிலையில், ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்திட்டத்தின்படி ஆசிரியர்களுக்கு ஊதியம் பெற்று வழங்குவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களைத் தவிர்த்திடும் பொருட்டு கலந்தாய்வில் பணியிட மாறுதல், பதவி உயர்வுகள், பணி நிரவல்கள் பெற்ற அனைத்துவகை ஆசிரியர்களையும் பிப்ரவரி 28ஆம் தேதி மாலையில் பணி விடுப்பு செய்து, மார்ச் 1ஆம் தேதி பணியில் சேர மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அதில் கூறியுள்ளார்.

Comments

Popular posts from this blog