தேர்வு முறைகேடில் ஈடுபட்டால் ரூ.10 கோடி அபராதம்



ராஜஸ்தானில் ஆசிரியர் தகுதித்தேர்வு வினாத்தாள் கசிவினால் சர்ச்சை ஏற்பட்டது. அதை தடுக்க ராஜஸ்தான் அரசு மசோதா ஒன்றை முன் வைத்தது.


அந்த மசோதாவின்படி குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு 5 முதல் 10 ஆண்டு வரை சிறைதண்டனையும் ரூ.10 லட்சம் முதல் ரூ.10 கோடி வரை அபராதம் விதிக்க முன்மொழிந்தது.


ஏற்கனவே கடந்த ஆண்டு செப்டம்பரில் நடந்த வினாத்தாள் கசிவு விவகாரத்தில் சிறப்பு நடவடிக்கைக் குழு இதுவரை 40 பேரை கைது செய்துள்ளது.


பொதுத் தேர்வுகளில் நியாயமற்ற வழிகளை கட்டுப்படுத்த 1992இல் சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டத்தின்படி முறைகேடில் ஈடுபடுவோர்க்கு அதிகபட்சமாக மூன்று ஆண்டு சிறைதண்டனையும் ரூ.2,000 அபராதமும் விதிக்கப்பட்டது.


இந்நிலையில் சட்டசபையில் 1992இல் சட்டம் இயற்றப்பட்ட சட்டத்தில் திருத்தம் செய்து மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதன்படி பொதுத்தேர்வில் ஒருவரிடமிருந்து அங்கிகரிக்கப்படாத உதவி பெற்றாலோ நவீன தொழில்நுட்ப்பத்தைப் பயன்படுத்தி மோசடி செய்தாலோ அந்த நபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.


ஆள்மாறாட்டம் செய்தாலோ, வினாத்தாளை வெளியிட்டாலோ 5 ஆண்டு முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் ரூ.10 லட்சம் முதல் ரூ.10 கோடி வரை அபராதமும் விதிக்கப்படலாம் என சட்டத்திருத்தம் முன்மொழிந்துள்ளது.


முறைகேடு செய்து புதிய சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்ட தேர்வர், இரண்டு ஆண்டுகளுக்கு பொது ஆட்சேர்ப்பு தேர்வுக்கு விண்ணப்பத்தில் இருந்து தடை செய்யப்படுவார்.


தேர்வு செயல்முறையில் ஈடுபட்டுள்ள நிறுவனத்தை சேர்ந்தவர்கள் குற்றத்தில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்டால், நீதிமன்றத்தால் நிர்ணயிக்கப்பட்ட தேர்வு தொடர்பான அனைத்து செலவையும் அந்நிறுவனம் செலுத்த வேண்டியிருக்கும், மேலும் அந்நிறுவனம் நிரந்தரமாக தடை செய்யப்படும்.


முன்மொழியப்பட்ட சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டால் ஜாமீனில் வெளிவர முடியாது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Comments

Popular posts from this blog