TNPSC Press Meet | குரூப்- 2, 2ஏ தேர்வுகள்; டிஎன்பிஎஸ்சி நாளை முக்கிய அறிவிப்பு





குரூப்-2, 2ஏ தேர்வுகள் எப்போது நடத்தப்படும் என்பது குறித்து டிஎன்பிஎஸ்சி நாளை முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளது.


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் இந்த ஆண்டு 32 வகையான தேர்வுகளை நடத்திட திட்டமிடப்பட்டு வருகிறது. குறிப்பாக குரூப்-1 தேர்வுகளை மே மாதம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. குரூப்-2, குரூப்- 2 ஏ தேர்விற்கான அறிவிப்பு இம்மாதத்திலேயே வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. குரூப்- 4 தேர்வு குறித்து மார்ச் மாதத்தில் அறிவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அவ்வாறு அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து 75 நாட்களில் தேர்வுகள் நடத்தப்படும்.


தமிழ்நாடு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் அனைத்து போட்டித்தேர்வுகளிலும் தமிழ் மொழித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வில் 100 மதிப்பெண்களுக்குத் தேர்வுகள் நடைபெறும். இத்தேர்வில் 40 மதிப்பெண்கள் பெற்றவர்கள் மட்டுமே அடுத்தகட்ட தேர்விற்கு எடுத்துக்கொள்ளப்படுவர்.


அதேபோல தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளின் நேரமும் மாற்றப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் தேர்வுகள் அனைத்தும் இனிவரும் காலங்களில் காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை நடைபெறும். அதேபோல பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்வு நடைபெறும்.


தேர்வு எழுதுபவர்கள் தேர்வு மையத்திற்கு அனுமதிக்கப்பட்ட நேரத்தினை விட 30 நிமிடத்திற்கு முன்னதாகவே வருகைபுரிய வேண்டும். அவ்வாறு வருகை தராதவர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும் இனிவரும் காலங்களில் நடைபெறும் போட்டித்தேர்வுகளுக்கு விண்ணப்பதாரர்களின் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே இதுவரை ஆதார் எண்ணைப் பதிவு செய்யாதவர்கள் பிப். 28-ம் தேதிக்குள் ஆதார் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும்.

இந்நிலையில், 2022ஆம் ஆண்டு நடைபெற உள்ள டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுக்கான அட்டவணை நாளை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கான அறிவிப்பைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பாலச்சந்திரன், நாளை (பிப்.18) மதியம் அறிவிக்க உள்ளார்.


குரூப் 2, 2 ஏ - குரூப் 4 - காலிப் பணியிடங்கள் எத்தனை?


குரூப் 2, 2 ஏ தேர்வுக்கான காலி பணியிடங்கள் - 5,831


குரூப் 4 தேர்வில் பழைய காலிப் பணியிடம் 5,255, புதிய காலிப் பணியிடம் 3,000


* காலிப் பணியிடங்கள் மாற்றி அமைக்கப்படவும் வாய்ப்புள்ளது.


தேர்வு முறைகேடுகளைத் தடுக்க அப்ஜெக்டிவ் முறையில் தேர்வுகளை நடத்தவும் டிஜிட்டல் முறையில் விடைத்தாள் ஸ்கேன் செய்யப்பட்டு, விடைத்தாள் கொண்டு வரும் வாகனங்கள் ஜிபிஎஸ் மூலம் கண்காணிக்கப்படும் என்றும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Comments

Popular posts from this blog