மார்ச் 20 இல் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம்.. எதற்கு இந்த கூட்டம்.. இதன் பயன் என்ன ?




அரசுப் பள்ளிகளின் முன்னேற்றத்துக்காகவும், பள்ளிச் செயல்பாடுகளை மேலாண்மை செய்வதற்காகவும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழு மற்றும் அனைத்து பெற்றோர் கூட்டத்தை மார்ச் 20-ஆம் தேதி நடத்துமாறு பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.


கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளி மேலாண்மை குழு கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் பரப்புரை தொடக்கவிழா நிகழ்ச்சி நேற்று (மார்ச் 9) நடைபெற்றது. இதில் பள்ளி மேலாண்மை குழுவை மேம்படுத்தும் வகையில் 'நம் பள்ளி நம் பெருமை' என்ற புதிய செயலியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.


அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், " அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் வகையில் பள்ளி மேலாண்மை குழுக்களை மறுகட்டமைப்பு செய்யவும் மேலாண்மை குழுக்களின் அவசியம் குறித்து பெற்றோர் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் இந்த புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.


பள்ளி மேலாண்மை குழு


பள்ளி மேலாண்மை குழுவில், பள்ளியில் பயிலும் மாணவரின் பெற்றோர் மட்டுமே தலைவராக நியமிக்கப்பட வேண்டும். மேலும், துணை தலைவர் உள்ளிட்ட பதவிகளும் நியமனம் செய்யப்பட வேண்டும். உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் இதில் சேர்க்கப்படுவார்கள். 20 பேர் கொண்ட பள்ளி மேலாண்மை குழு பள்ளியின் வளர்ச்சிக்கு தேவையான பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தும்.


மேலும், பள்ளி மேலாண்மை குழு நியமனத்தில் அரசியல் தலையீடு எங்கும் இருக்காது. பள்ளிகளில் அரசியல் தலையீடு இருக்கக் கூடாது என்பது முதலமைச்சரின் உத்தரவாக உள்ளது. பெற்றோர் ஆசிரியர் கழக நியமனங்களில் திமுகவினர் தலையீடு இருந்தால் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.


மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்த


பள்ளி மேலாண்மைக் குழு என்பது இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் உள்ள பள்ளிகளில், பள்ளியின் செயல்பாடுகளை மேலாண்மை செய்வதற்காகக் கட்டாய கல்வி உரிமைச்சட்டம் 2009-இன்படி ஏற்படுத்தப்பட்ட குழு ஆகும். பள்ளி வளர்ச்சியில் கவனம் செலுத்துதல், சமுதாயத்துக்கும் தொடர்பு ஊடகமாக இருத்தல்.


பள்ளிகளில் அரசியல் தலையீடு இருக்கக் கூடாது என்பது முதலமைச்சரின் உத்தரவு

அனைத்துப் பள்ளி வயது குழந்தைகளையும் (6 முதல், 14 வயது) பள்ளியில் சேர்ப்பது, பள்ளியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல், மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்துதல், இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் கூறப்பட்டுள்ளவற்றை நடைமுறைப்படுத்துதல் ஆகியவை இக்குழுவின் நோக்கங்களாகும்.


இக்குழுவின் தலைவராகப் பள்ளியில் பயிலும் ஏதேனும் ஒரு குழந்தையின் தாய் அல்லது தந்தை இருப்பர். இக்குழு அனைவருக்கும் கல்வித் திட்டம் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டுக் கண்கானிக்கப்படுகிறது.


பள்ளியின் வளர்ச்சியில் முக்கிய பங்கு


இதனிடையே, பள்ளி மேலாண்மைக் குழு குறித்து அவர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், "அரசுப் பள்ளிகளின் முன்னேற்றத்துக்காகவும், பள்ளிச் செயல்பாடுகளை மேலாண்மை செய்வதற்காகவும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஏற்படுத்தப்பட்டதே பள்ளி மேலாண்மைக் குழுவாகும். அரசு வழிகாட்டுதலின் அடிப்படையில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு பள்ளியின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கிறது.


 பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார்

பள்ளிக் கல்வித்துறை அரசாணையின்படி பள்ளி மேலாண்மைக் குழுவினை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மறு கட்டமைப்பு செய்வது அவசியமாகும். அதன்படி அனைத்து பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மைக் குழுவினை மறுகட்டமைப்பு செய்வதற்குத் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.


 

மேலும் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களின் பெற்றோர்களிடையே பள்ளி மேலாண்மைக் குழு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மார்ச் 20-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை பள்ளி மேலாண்மைக் குழு மற்றும் அனைத்து பெற்றோர் கூட்டம் அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் முன்னிலையில் நடத்தப்பட வேண்டும்.


இந்தக் கூட்டத்தில் பெற்றோர்களுக்குப் பள்ளி மேலாண்மைக் குழு அமைப்பு, அதன் செயல்பாடுகள், பள்ளி மேலாண்மைக் குழுவின் முக்கியத்துவம், பெற்றோர்களின் பங்கு மற்றும் அடுத்து நடைபெறவுள்ள பள்ளி மேலாண்மைக்குழு (உறுப்பினர்களின் தேர்வு) மறு கட்டமைப்பு நிகழ்வில் பெற்றோர் கலந்து கொள்வதின் முக்கியத்துவம் ஆகியவற்றை விளக்கமாக எளிய முறையில் தலைமை ஆசிரியர்கள் எடுத்துரைக்க வேண்டும்.


 மார்ச் 19 அரசுப் பள்ளிகளுக்கும் விடுமுறை

மார்ச் 19-ல் விடுமுறை: தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையும் பள்ளிக்கு வர வேண்டிய சூழல் உள்ளதால் மார்ச் 19-ம் தேதி தொடக்க நிலை முதல் மேல்நிலை வரை அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog