மாணவர்களிடம் தலைத்தூக்கும் வன்முறை - குழு அமைக்க வலியுறுத்தும் ஆசிரியர்கள்




அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிடம் தற்காலமாக அதிகரித்து வரும் வன்முறைகளை குறைப்பதற்காக நன்னடத்தை பாடத்தை மீண்டும் கற்பிக்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தமிழ்நாட்டில் சமீபத்தில் அரசுப்பள்ளி மாணவர்கள் பேருந்துகளில் கலாட்டா செய்தது, ஆசிரியரை கத்தியால் குத்த முயன்ற சம்பவம், பள்ளிகளில் ஆசிரியர்களிடம் வன்முறையாக நடந்துக் கொள்வது போன்றவை அதிகரித்து வருகிறது. மேலும், மாணவர்களை அடித்தாலோ பெற்றோர்கள் ஆசிரியர்களிடம் நேரில் பிரச்சனை செய்கின்றனர். இதனால் ஆசிரியர்கள் தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என கேட்கும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது.


இதுகுறித்து, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் கூறும்போது, "தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் ஒழுக்க குறைபாடான செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்கள் பேருந்துகளில் ஒழுக்க குறைவான செயல்பாடுகளில் ஈடுபடுவது, வழிபறிகளில் ஈடுபடுவது, மது அருந்துவது போன்ற ஒழுக்கக் கேடான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.


ஆசிரியர்களுக்கு ஒத்துழைக்கவும்: பள்ளிகளில் ஆசிரியர்களை தாக்குவது, மது அருந்திவிட்டு பள்ளிக்கு வருவது, பேருந்துகளில் பொருள்களை சேதப்படுத்துவது, அரசின் பொருள்களை சேதப்படுத்துவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இவற்றை அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இதுபோன்ற மாணவர்களை தனியாக கண்டறிந்து நல்லொழுக்கத்தை கற்பிக்க வேண்டும்.


ஒவ்வொரு ஒன்றியத்திலும் தனியாக ஆலாேசகர்களை நியமனம் செய்து மாணவர்களுக்கு ஆற்றுப்படுத்துதல் பயிற்சியை அளிக்க வேண்டும். நல்ல ஆலோசனைகளை வழங்கி சமூகத்தில் நல்லவர்களாக உருவாக்கவும், காவல் துறையுடன் இணைந்து செயல்பட வேண்டும். மேலும் தடைச் செய்யப்பட்ட பொருட்களான குட்கா, பான்பராக் , கஞ்சா போன்றவை பள்ளிக்கு அருகில் விற்கப்படுவதை பார்க்கிறோம்.


மாணவர்களிடம் தலைத்தூக்கும் வன்முறை: குழு அமைக்க வலியுறுத்தும் ஆசிரியர்கள்


மேலும் பேருந்துகளில் மாணவிகள் மது அருந்துவதையும் பார்க்கிறோம். பள்ளிகளில் மாணவர்களை கண்டிக்க இயலவில்லை. அரசு உடனடியாக தலையிட்டு, காவல் துறையும், சமூக நலத்துறையும் இணைந்து ஆசிரியர்களுடன் ஒத்துழைப்புடன் நல்வழிப்படுத்துப்பட வேண்டும்" என கூறினார்.


பயப்படும் ஆசிரியர்கள்: தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்கத்தின் மாநிலத் தலைவர் தியாகராஜன் கூறும்போது, "மாணவர்கள் ஆசிரியர்களை தாக்கும் சம்பவங்களும், மாணவர்களின் உறவினர்கள் பள்ளிக்கே வந்து ஆசிரியர்களை தாக்கும் சம்பவமும் சமீபத்தில் அதிகரித்து வருகிறது. இது மிகப்பெரியப் பின்னடைவை ஆசிரியர்கள் மாணவர்கள் உறவில் ஏற்படுத்தி உள்ளது.


மாணவர்கள் ஆசிரியர்களுக்கு பயந்து பள்ளிக்கு வரும் சூழல் மாறி, இன்று ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பயந்து பள்ளிக்கு வரும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது. ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பாற்ற சூழ்நிலை உள்ளதாக பயத்தில் உள்ளனர். பெண் ஆசிரியர்கள் மிகவும் பயத்தில் உள்ளனர்.


அதே நேரத்தில், மாணவர்களை மட்டும் குறைச்சொல்லி விலகிச் செல்ல முடியாது. கரோனா பெருந்தொற்றால் மாணவர்கள் வீட்டில் இருந்து வந்தனர். அவர்களின் பாதிப்புகளை பள்ளிக்கல்வித் துறையும் கண்டறிய வேண்டிய நிலை உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் ஓரு குழுவை அமைத்து, மாணவர்கள் ஆசிரியர்கள் இடையே ஏற்பட்டுள்ள பிளவை களைய வேண்டும்.


மேலும், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு குறைந்தபட்ச கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். ஆசிரியர்கள் சுந்திரமாக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாத சூழ்நிலை உள்ளது. அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் ஏழை எளிய மாணவர்கள். ஒரு சில மாணவர்களின் தவறுக்காக மற்ற மாணவர்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.


Comments

Popular posts from this blog