மதிப்பெண், சீனியாரிட்டி முறையில் பதவி உயர்வு டிஎன்பிஎஸ்சி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு




தமிழகத்தில் அரசு பணியில் மதிப்பெண் மற்றும் சீனியாரிட்டி முறையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற முந்தைய உத்தரவில் தற்போது வரையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த நிலை அறிக்கையை தாக்கல் செய்ய டிஎன்பிஎஸ்சிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி உட்பட அரசுப் பணிகளில் மதிப்பெண் மற்றும் சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு அக்டோபர் 1ம் தேதி தீர்ப்பு வழங்கியிருந்தது. இந்த உத்தரவை நடைமுறைப் படுத்தவில்லை என டிஎன்பிஎஸ்சி செயாலளர், பொதுப்பணித்துறை செயலாளர், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை செயலாளர், நெடுஞ்சாலைத்துறை செயலாளர் உள்ளிட்டோருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் செந்தூர் என்பவர் உட்பட பலர் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி உட்பட அரசு பணியில் மதிப்பெண் மற்றும் சீனியாரிட்டி முறையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற முந்தைய உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும்' என கடந்த ஜனவரி 19ம் தேதி உத்தரவிட்டிருந்தது.


இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ் மற்றும் பி.ஆர்.கவாய் ஆகியோர் அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், ''இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் முன்னதாக உத்தரவிட்டும் தற்போது வரையில் சீனியாரிட்டி மற்றும் மதிப்பெண் அடிப்படையில் பதவி உயர்வு வழங்குவதில் எந்தவித நடவடிக்கையும் டிஎன்பிஎஸ்சி எடுக்கவில்லை. மேலும் அதுசார்ந்த பட்டியலை கூட தயாரிக்கவில்லை'' என தெரிவித்தார். 


அதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், ''அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்து வருகிறது. விரைவில் அமல்படுத்துவோம்'' என தெரிவித்தார். இதைக் கேட்ட நீதிபதிகள், ''அடுத்த மூன்று வாரத்தில் இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த நிலை அறிக்கையை டிஎன்பிஎஸ்சி தாக்கல் செய்ய வேண்டும்'' என உத்தரவிட்டனர்.

Comments

Popular posts from this blog