போட்டித் தேர்வுக்குத் தயாராகும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் நூல்கள் - பொது நூலகத்துறை புதிய கட்டுப்பாடு



அரசு நூலகங்களுக்கு பருவ இதழ், நாளிதழ் வாங்க புதிதாக அமைக்கப்பட்ட தேர்வுக்குழுவின் கூட்டம் கன்னிமாரா பாெது நூலகத்தில் நடைபெற்றது.


பொது நூலகத்துறையின்கீழ் இயங்கி வரும் மாவட்ட மைய நூலகங்கள் மற்றும் கிளை நூலகங்களில் நாளிதழ்கள், பருவ இதழ்கள் பெறுவதற்காக பொது நூலக இயக்குநரகத்தில் அங்கீகரிக்கப்பட்ட பட்டியல் உள்ளது.


இந்த அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் 514 தமிழ்ப் பருவ இதழ்களும், 168 ஆங்கில பருவ இதழ்களும் இடம்பெற்றுள்ளன. இந்தப் பட்டியலில் உள்ள நாளிதழ்கள் மற்றும் பருவ இதழ்களில் பெரும்பாலானவை நிறுத்தம் செய்யப்பட்டும், வாசகர்களால் அதிகம் பயன்படுத்தப்படாத இதழ்களும் அடங்கி உள்ளன.


எனவே, வாசகர்கள், மாணவர்கள், போட்டித்தேர்வுக்குத் தயாராகும் இளைஞர்கள் ஆகியோரின் தேவையின் அடிப்படையில் பட்டியலை மறு சீரமைப்பு செய்வதற்காக 10 துறை சார் நிபுணர்கள் அடங்கிய தேர்வுக்குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.


இந்தத் தேர்வுக்குழுவின் கூட்டம் கன்னிமாரா பாெது நூலகத்தில் பொது நூலகத்துறை இயக்குநர் இளம்பகவத் தலைமையில் நேற்று (மார்ச் 6) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இதழ்கள் தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் விவாதிக்கப்பட்டன.


கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவு


இந்தியாவில் வெளியாகும் அனைத்து இதழ்கள் மற்றும் நூல்கள் பொது நூலகங்களுக்கு 'நூல்கள் மற்றும் நாளிதழ்கள் அனுப்புகைச் சட்டம் 1954இன்படி ' கன்னிமாரா பொது நூலகம் உள்ளிட்ட நான்கு வைப்பக நூலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.


எனவே, கன்னிமாரா நூலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் இதழ்களில் இருந்து பொது நூலகங்களுக்கு இதழ்கள் தேர்வுச் செய்யப்படும் என்று கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


நூல்கள் மற்றும் நாளிதழ்கள் அனுப்புகைச் சட்டத்தின்படி, இதழ்களை வைப்பக நூலகத்திற்கு அனுப்பாத இதழ்கள் உடனடியாக மூன்று இதழ் பிரதிகளை கன்னிமாரா பொது நூலகத்திற்கு பொது நூலக இதழ் தேர்வுக்குழுவின் பரிசீலனைக்கு எனக் குறிப்பிட்டு மார்ச் 12ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog