TNTET: தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்ப நடைமுறை தொடங்கின




ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இன்று (2022, மார்ச் 14 திங்கள்கிழமை) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.


இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க எவ்வித வயது வரம்பு கட்டுப்பாடும் கிடையாது என்பதால் வழக்கத்தை விட மிக அதிகமான எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் எதிர்பார்க்கப்படுகின்றனர்.


மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி 8ஆம் வகுப்பு வரையிலான இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு (Teacher Eligibility Test (TET)) டெட்டில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம் ஆகும்.


தமிழகத்தில் இந்த ஆசிரியர் தகுதித் தேர்வை, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது. தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் (National Council for Teacher Education) விதிமுறையின்படி ஆண்டுதோறும் டெட் தேர்வு நடத்தப்பட வேண்டும்.


தமிழகத்தில் 2012 முதல் 2019 வரை 5 முறை நடத்தப்பட்டிருக்கும் 'டெட்' தேர்வுகள் மூலம், 95 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களில் 25 ஆயிரம் பேர் அரசுப் பணியில் சேர்ந்த நிலையில், எஞ்சியவர்கள் அரசுப் பணி வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர்.


கடைசியாக 2019-ம் ஆண்டு நடத்தப்பட்டடெட் தேர்வு, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 2020, 2021 என கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. தற்போது, பாதிப்பு குறைந்துள்ள நிலையில், கொரோனா தொடர்பான அனைத்து கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளன.


அதன் அடிப்படையில் 2022-ம் ஆண்டுக்கான 'டெட்' தேர்வு குறித்த அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 7-ம் தேதி வெளியிட்டது.


இந்தத் தேர்வுக்கு மார்ச் 14 முதல் ஏப்ரல் 13 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பின்படி, டெட் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்று தொடங்கியது.


இந்தத் தகுதித் தேர்வில், தாள்-1 தேர்வை, இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களும், தாள்-2 தேர்வை, பிஎட் முடித்த பட்டதாரிகளும் எழுத வேண்டும்.


ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளமான www.trb.tn.nic.in மூலம் இன்று முதல் தேர்வுக்கு விண்ணப்ப்பிக்கலாம். பொதுப் பிரிவினருக்கான தேர்வுக் கட்டணம் 500 ரூபாய் ஆகும். எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கும் மாற்றுத் திறனாளிகள், 250 ரூபாய் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும்.


இடைநிலை ஆசிரியர் பயிற்சி மற்றும் பிஎட்இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களும் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog