வரும் 28ம் தேதியுடன் காலக்கெடு முடிகிறது குரூப் 4 தேர்வுக்கு 13 லட்சம் பேர் விண்ணப்பம்: டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் தகவல்




குரூப் 4 தேர்வுக்கு நேற்று மாலை வரை 13 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


அதே நேரத்தில் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் 4 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளதால் அதிகமானோர் விண்ணப்பிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) குரூப் 4 பதவியில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர்(விஏஓ) 274 இடம், ஜூனியர் அசிஸ்டெண்ட் 3,681, தட்டச்சர் 2,108, சுருக்கெழுத்து தட்டச்சர்(கிரேடு 3) 1024 என 7,138 இடங்கள். தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் ஜூனியர் அசிஸ்டெண்ட், பில் கலெக்டர், சுருக்கெழுத்து தட்டச்சர் பதவியில் 163 இடங்கள் நிரப்பப்படுகிறது. மொத்தம் குரூப் 4 பதவியில் 7,301 இடங்கள் போட்டி தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது.


மேலும் 81 இடங்கள் விளையாட்டு வீரர்களுக்கான இடங்களும் நிரப்பப்பட உள்ளது. இத்தேர்வுக்கு கடந்த 30ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. அன்று முதல் தேர்வுக்கும் விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. 10ம் வகுப்பு தேர்ச்சி தான் கல்வி தகுதி என்பதால் தேர்வுக்கு விண்ணப்பித்தல் தொடங்கியதில் இருந்து இளைஞர்கள், இளநிலை, முதுநிலை பட்டதாரிகள் என்று போட்டு போட்டு கொண்டு விண்ணப்பித்து வருகின்றனர். தேர்வுக்கு விண்ணப்பிக்க வருகிற 28ம் நள்ளிரவு 12 மணி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றுடன் 4 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளதால் விண்ணப்பிப்போர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.


இது குறித்து டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது: குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று மாலை 6 மணி நிலவரப்படி 13 லட்சத்து 2 ஆயிரத்து 688 பேர் விண்ணப்பித்துள்ளனர்.


 இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க வருகிற 28ம் தேதி வரை கால அவகாசம் உள்ளது. இதனால், விண்ணப்பிப்போர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதிகமானோர் விண்ணப்பிக்க வாய்ப்புள்ளதால் அதற்கேற்றார் போல் நடவடிக்கைகளை டிஎன்பிஎஸ்சி துரிதப்படுத்தி உள்ளது. 


தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பத்தில் கேட்டுள்ள விவரங்களை ஒழுங்காக பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். குரூப் 4 தேர்வுக்கான எழுத்து தேர்வு ஜூலை 24ம் தேதி நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog