குரூப் 4 பதவிக்கு 2 நாளில் 41 ஆயிரம் பேர் விண்ணப்பம்: இத்தேர்வுக்கு சுமார் 25 லட்சம் பேர் வரை விண்ணப்பிக்க வாய்ப்பு உள்ளது என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் தகவல்




தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 பதவியில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர்(விஏஓ) 274 பதவிகள், ஜூனியர் அசிஸ்டெண்ட் 3,593(பிணையமற்றது), ஜூனியர் அசிஸ்டெண்ட் 88(பிணையம்), தட்டச்சர் 2108, சுருக்கெழுத்து தட்டச்சர்(கிரேடு 3) 1,024, ஸ்டோர் கீப்பர் 1 என 7138 இடங்களும், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் ஆகியவற்றின் கீழ் வரும் ஜூனியர் அசிஸ்டெண்ட், பில் கலெக்டர், சுருக்கெழுத்து தட்டச்சர் பதவியில் 163 இடங்கள் நிரப்பப்படுகிறது.



மொத்தம் குரூப் 4 பதவியில் 7,301 இடங்கள் போட்டி தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. மேலும் 81 இடங்கள் விளையாட்டு வீரர்களுக்கான இடங்களும் நிரப்பப்பட உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி நேற்று முன்தினம் வெளியிட்டது. அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து ஆன்லைனில்(www.tnpsc.gov.in, www.tnpscexams.in) விண்ணப்பித்தல் பணி தொடங்கியது. 'இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க 10ம் வகுப்பு தேர்ச்சி கல்வி தகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், இந்த தேர்வுக்கு போட்டி போட்டு கொண்டு விண்ணப்பிக்க தேர்வர்கள் தொடங்கியுள்ளனர்.


இது குறித்து டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது: குரூப் 4 தேர்வுக்கு கடந்த 30ம் தேதி(நேற்று முன்தினம்) முதல் விண்ணப்பித்தல் தொடங்கியது. நேற்று வரை 2 நாட்களில்( நேற்று மாலை 5 மணி நிலவரப்படி) 40,975 பேர் விண்ணப்பித்துள்ளனர். தேர்வுக்கு விண்ணப்பிக்க அடுத்த மாதம் 28ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு சுமார் 25 லட்சம் பேர் வரை விண்ணப்பிக்க வாய்ப்பு உள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள் வரை காத்திராமல் விண்ணப்பிப்பது நல்லது. இவ்வாறு அவர் கூறினார்

Comments

Popular posts from this blog