தொலைதூரக் கல்வி மூலம் ஸ்லெட்,நெட் தேறியவர்களுக்கும் உதவிப் பேராசிரியர் பணி வழங்கப்படுமா? - அமைச்சர் பொன்முடி விளக்கம்




தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, தொலைதூரக் கல்வி மூலம் படித்து ஸ்லெட்,நெட் தேர்வுகளில் வென்றவர்களுக்கு உதவிப் பேராசிரியர் பணி வழங்கப்படுமா?


என்ற கேள்விக்கு உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பதிலளித்தார். வருங்காலங்களில் தமிழக அரசு அதற்கான ஏற்பாடுகளை நிச்சயமாக செய்யும் என்று அவர் கூறியுள்ளார்.


தமிழக சட்டப்பேரவையில் இன்று சட்டம், நீதி நிர்வாகம் மற்றும் செய்தி மற்றும் விளம்பரத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதற்கு துறையின் அமைச்சர்கள் ரகுபதி, சாமிநாதன் ஆகியோர் பதலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிடட்டனர்.


முன்னதாக காலை 10 மணிக்கு பேரவை கேள்வி நேரத்துடன் தொடங்கியது. உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர்.


அப்போது,சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில்நாதன், கல்லூரி உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு யுஜிசி விதிகளின்படி, ஸ்லெட், நெட் அல்லது பி.எச்டி படித்திருக்க வேண்டும் என்ற விதி இருக்கிறது. இதன்படி ஏழை மாணவர்கள் பலர் தொலைதூர வழியில் கல்வி கற்று, ஸ்லெட், நெட் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்களுக்குச் சென்றனர். இந்த நிலையில் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு தொலைதூரக் கல்வி மூலம் படித்தது செல்லாது என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பளித்து. எனவே 2019-ம் ஆண்டு உயர் நீதிமன்ற உத்தரவுக்கு முன்பாக தொலைதூரக் கல்வி மூலம் படித்து ஸ்லெட், நெட் தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு உதவிப் பேராசிரியர் பணியிடங்களை வழங்க அரசு முன்வருமா என்று கேள்வி எழுப்பினார்.


இதற்கு பதிலளித்த உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, "ஸ்லெட், நெட் தேர்வெல்லாம் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) தொடர்புடையது. யுஜிசிக்குத்தான் பல்கலைக்கழகங்களைக் கட்டுப்படுத்தக்கூடிய அதிகாரம் எல்லாம் உள்ளது. அவர்கள்தான் ஸ்லெட், நெட் தேர்வெல்லாம் நடத்துகின்றனர்.


அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தற்போது தொலைதூரக் கல்வி நடந்துகொண்டிருக்கிறது. அதைகூட நாங்கள் அங்கீகரிக்க மாட்டோம் என்று யுஜிசி அறிவித்திருக்கிறது. அங்கீகரிக்க வேண்டும் என்று தமிழக அரசு யுஜிசியிடம் கோரிக்கை வைத்துள்ளது.


இந்த தொலைதூரக் கல்வியின் வாயிலாக, படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் எல்லாம் அதன்மூலம் படிப்பைத் தொடர்வதற்கு அதில் வாய்ப்பிருக்கிறது என்ற காரணத்தினால்தான் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் இந்த தொலைதூரக் கல்வித் திட்டம் தொடங்கப்பட்டது என்பது உண்மை.


இந்த தொலைதூரக் கல்வி மூலம் படித்தவர்களுக்கு வேண்டும் எனக்கூறப்பட்டுள்ள தகுதிகளை அரசும் ஏற்றுக்கொண்டு, இதுதொடர்பாக யுஜிசிக்கு எழுதலாம், அதேபோல், தற்போது கவுரவ விரிவுரையாளர்களாக இருக்கின்ற பலர் ஸ்லெட்,நெட் தேர்ச்சிப் பெற்றும் உள்ளனர். எனவே அதுதொடர்பாகவும் பரிசீலித்து இந்த பணிகளிலே நியமிப்பதற்கான இந்த அரசு சிந்தித்துக்கொண்டிருக்கிறது. நிச்சயமாக இந்த அரசு வருங்காலங்களில் அதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்" என்று அவர் கூறினார்.

Comments

Popular posts from this blog