டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம் தேவை: அன்புமணி



ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (டெட்) விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.


மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி 8ஆம் வகுப்பு வரையிலான இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் (Teacher Eligibility Test (TET)) தேர்ச்சி பெற வேண்டியது அவசியம் ஆகும். தமிழகத்தில் இந்த ஆசிரியர் தகுதித் தேர்வை, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது. தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் (National Council for Teacher Education) விதிமுறையின்படி ஆண்டுதோறும் டெட் தேர்வு நடத்தப்பட வேண்டும்.


தமிழகத்தில் 2012 முதல் 2019 வரை 5 முறை நடத்தப்பட்டிருக்கும் 'டெட்' தேர்வுகள் மூலம், 95 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களில் 25 ஆயிரம் பேர் அரசுப் பணியில் சேர்ந்த நிலையில், எஞ்சியவர்கள் அரசுப் பணி வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர்.


கடைசியாக 2019-ம் ஆண்டு நடத்தப்பட்டடெட் தேர்வு, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 2020, 2021 என கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. தற்போது, பாதிப்பு குறைந்துள்ள நிலையில், கொரோனா தொடர்பான அனைத்து கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் 2022-ம் ஆண்டுக்கான 'டெட்' தேர்வு குறித்த அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 7-ம் தேதி வெளியிட்டது.


இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க எவ்வித வயது வரம்பு கட்டுப்பாடும் கிடையாது என்பதால் வழக்கத்தை விட மிக அதிகமான எண்ணிக்கையில் ஆன்லைனில் ஏராளாமானோர் விண்ணப்பித்தனர். இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஏப்ரல் 13-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.


இது தொடர்பாகத் தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு கடந்த 13-ஆம் தேதியுடன் நிறைவடைந்து விட்டது. ஆனால், கடைசி ஒரு வாரத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சர்வர் முடங்கியதால் பல்லாயிரக்கணக்கானவர்களால் விண்ணப்பம் செய்ய முடியவில்லை!


பி.எட் பட்டப்படிப்புக்கான முதலாமாண்டு தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படாததால் அவர்களாலும் விண்ணப்பிக்க முடியவில்லை. சர்வர் பிரச்சினை, கால அவகாசம் போதாமையால் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு எதிர்பார்த்த அளவுக்கு விண்ணப்பங்கள் பெறப்படவில்லை!


கடந்த காலங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 7 லட்சம் பேர் வரை விண்ணப்பித்திருந்த நிலையில், இம்முறை சுமார் 4 லட்சம் பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்க வசதியாக நாளை (18ஆம் தேதி) முதல் இரு வாரம் கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும்!'' என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog