TNPSC குரூப்-4 தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள்: சென்னை, கோவையில் நடத்தும் கல்வி மையம்




தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தால் வெளியிடப்பட்ட அறிவிக்கையில் குரூப்-4 தேர்வு ‌ஜூலை 24ஆம் தேதி அன்று நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளிவந்து விண்ணப்பிக்கும் காலமும் முடிவடைந்துள்ளது.



7301 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனை அடுத்து மாணவர்களுக்கு உடனடியாக குரூப்-4 போட்டித் தேர்வுக்கு இலவசப் பயிற்சியளிக்க Dr. அம்பேத்கர் கல்வி மையம் தயாராகி உள்ளது. ஏற்கெனவே நடந்து வந்த குரூப்-2 வகுப்பிற்கான தேர்வு 21.5.2022 அன்று நடைபெற உள்ளதால் 22.5.2022 அன்றே குரூப்-4 வகுப்பு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது‌.


மாணவர்கள் தேர்வை எதிர்கொள்ள குறுகிய கால இடைவெளியே உள்ளதால் மாதிரித் தேர்வை தொடர்ந்து விரிவான கலந்துரையாடலையும் நடத்த Dr. அம்பேத்கர் கல்வி மையம் திட்டமிட்டுள்ளது.


இதுகுறித்து Dr. அம்பேத்கர் கல்வி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் வாசுதேவன் கூறுகையில், ''குரூப்-4 தேர்வில் பங்குபெறும் மாணவர்கள் தயாராக எட்டு வாரங்கள் மட்டும் உள்ளதால் பயிற்சி வகுப்புகள், தொழில்நுட்ப ரீதியாகவும் மாணவர்களுடைய திறமையை வெளிக்கொணரும் வகையிலும் இருக்கும். அதிகபட்சமாக வகுப்புகள், மாதிரித் தேர்வும் அதையொட்டிய மாணவர்களின் சந்தேகங்களைப் பூர்த்தி செய்யும் வகையில் கலந்துரையாடல் வடிவத்திலேயே இருக்கும். தேர்வில் வெற்றி பெற்ற முன்னாள் மாணவர்களும் திறமையான ஆசிரியர்களும் ஆலோசனைகளை வழங்குவார்கள்.


அரசுத் துறைகளில் பல்வேறு நிலையில் உள்ளவர்கள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வார்கள். இவ்வகுப்புகளை, Dr. அம்பேத்கர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி மையமும், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கமும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் இணைந்து நடத்தி வருகின்றன.



தலித்துகள் மற்றும் பழங்குடியின மாணவர்களும், பிற்படுத்தப்பட்ட ஏனைய பொருளாதாரத்தில் பின்தங்கிய, அனைத்து மாணவர்களும் பயன்பெறும் வகையில் வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. வழிகாட்டுதல் தேவைப்படும் கிராமப்பற மாணவர்கள், வீட்டிலிருந்தே பயிற்சி எடுத்தவர்கள், பயத்தினால் வாய்ப்பைத் தவறவிட்டவர்கள் இந்த வகுப்பை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.


கடந்த பத்து ஆண்டுகளாக பயிற்சிக் களத்தில் கிடைத்த முன் அனுபவங்களைக் கொண்டு பயிற்சி வகுப்புகளைச் சிறப்பாக நடத்தி வருகின்றோம். இங்கு பயின்ற 1200க்கும் மேற்பட்ட மாணவர்கள் போட்டித் தேர்வில் வெற்றி பெற்று அரசுத் துறைகளின் பல்வேறு நிலைகளில் சமூக அக்கறையுடன் பணியாற்றி வருகின்றனர்.



சென்னையில் ஏற்கெனவே பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. மாணவர்கள் தேர்விற்காக படித்திருந்து கூடுதலாக வழிகாட்டுதல் தேவைபடும் மாணவர்கள் தங்களை இணைத்துக் கொள்ள வாய்ப்புள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை வகுப்புகள் வாரந்தோறும் நடக்கும். ஒவ்வொரு வாரமும் நடக்கும் இந்த மாதிரித் தேர்வுடன் கூடிய சிறப்பம்சமே எல்லா மாணவர்களும் கலந்துரையாடலில் பங்கேற்று தனது திறமையை மேம்படுத்துவதுடன் தேர்வில் அதிகபட்ச பலத்தோடு வெற்றி பெறுவதுதான்.


Dr. அம்பேத்கர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி மையம் மாணவர்களுக்காக கோயம்புத்தூரிலும், பயிற்சி வகுப்பு நடப்பதால் (சுரேஷ் - 94881 55191) தேவைப்படும் மாணவர்கள் அணுகலாம். சமூக அக்கறையுடன் பின்தங்கிய மாணவர்களுக்கு தன்னார்வத்துடன் வகுப்பெடுக்க விருப்பம் உள்ளவர்களும் தொடர்பு கொள்ளலாம்.


பயிற்சி பெற விரும்பும் மாணவர்கள் தங்களது தற்போதைய புகைப்படம் மற்றும் குரூப்-4 தேர்விற்கு விண்ணப்பித்த நகலை உடன் (Xerox copy) கொண்டு வர வேண்டும். தவறும் மாணவர்கள் வகுப்பினுள் நுழைய அனுமதியில்லை.


மாணவர்கள் TNPSC குரூப்-4 தேர்வில் முழுமையாகப் பங்கேற்று தேர்வெழுதும் முழுத் தகுதியைப் பெற்றிருக்க வேண்டும். இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்புவோர் கட்டாயம் முன் பதிவு செய்திருக்க வேண்டும். பதிவுக் கட்டணம் உண்டு.


பயிற்சி நடைபெறும் இடம். சிஐடியு அலுவலகம். நெ. 6/9, கச்சாலீஷ்வரர் கோயில் அக்ராஹரம்., ஆர்மேனியன் தெரு, சென்னை- 600001.


பயிற்சி பெற விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்.

கங்காதரன் -

94442 14696

வாசுதேவன்.

94446 41712


மாணவர்கள் நம்பிக்கையுடன் கூடிய முயற்சியில் சரியான திட்டமிடலுடன் உறுதியாக தேர்வை எதிர்கொண்டால் எளிதாக வெற்றியைப் பெற முடியும்'' என்று தெரிவித்தார்.


Comments

Popular posts from this blog