கருணாநிதியின் வாக்குறுதி' - உதவிப் பேராசிரியர்களாக பணி நியமனம் ஆவார்களா கவுரவ விரிவுரையாளர்கள்?




கவுரவ விரிவுரையாளர்கள் உதவிப் பேராசிரியர்களாக நியமனம் செய்யப்படுவர் என 12 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி அளித்த வாக்குறுதியை, முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றுவாரா?என கவுரவ விரிவுரையாளர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.


இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து அரசு கல்லூரி யுஜிசி தகுதி கவுரவ விரி வுரையாளர்கள் சங்க மாநிலத் தலைவர் வெ.தங்கராஜ், இந்து தமிழ்திசையிடம் கூறியதாவது: அரசு கலைக் கல்லூரி களில் அதிக அளவில் கிராமப்புற மாணவர்கள் உயர்கல்வி படிக்க சுழற்சி முறையை 2006-07-ல் திமுக அரசு கொண்டு வந்தது.


அப்போது இளங்கலை கற்பிக்க எம்.பில் கல்வித்தகுதியாக யுஜிசி நிர்ணயித்தது. அதன்படி எம்.பில், பி.எச்டி, நெட், ஸ்லெட் கல்வித்தகுதியை பெற்றவர்கள் கவுரவ விரிவுரையாளராக நியமிக்கப்பட்டு இன்றுவரை 13 முதல்16 ஆண்டுகளாக பணியாற்றுகின்றனர். தற்போது இரண்டு சுழற்சிகளிலும் 4,084 கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்று கின்றனர். இவர்களில் சுமார் 3,000 பேர் பி.எச்டி, நெட், ஸ்லெட் தகுதியை பெற்றுள்ளனர்.


கருணாநிதி வாக்குறுதி


கவுரவ விரிவுரையாளர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி 2010 மார்ச்சில் 15 நாட்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது யுஜிசி தகுதியை கவுரவ விரிவுரையாளர்கள் பெறுவார் களேயானால் சிறப்புத் தேர்வு மூலமாக பணி அமர்த்தப்படுவர் என அன்றைய முதல்வர் மு.கருணாநிதி மற்றும் அமைச்சர் பொன்முடி சார்பில் எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் அளிக்கப்பட்டது.


யுஜிசி தகுதியுடன் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்கள் நீண்ட கால பணி அனுபவத்தின் அடிப்படையில் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என கடந்த அதிமுக அரசு 30.5.2018 அன்று அறிவித்து, 1,146 கவுரவ விரிவுரையாளர்களை உதவிப் பேராசிரியராக தேர்வு செய்ய 21.3.2020-ல் அரசாணை வெளியிட்டது. இவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்த நிலையில், சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டதால், நேர்முகத் தேர்வு நடத்தி பணி நியமனம் செய்யப்படவில்லை.


ஆனால் 2021-ல் திமுக ஆட்சிக்கு வந்ததும், தேர்வுக்குழு கலைக்கப்பட்டு ஆசிரியர் தேர்வு வாரியம் அல்லது டிஎன்பிஎஸ்சி மூலம் கவுரவ விரிவுரையாளர்கள் உதவிப் பேராசிரியராக நியமனம் செய்யப்படுவர் என உயர்கல்வி அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து காத்திருக்கும் 1,146 கவுரவ விரி வுரையாளர்களுக்கு நேர்காணல் நடத்தி பணியில் நியமித்து, கருணா நிதியின் வாக்குறுதியை முதல்வர் நிறைவேற்ற வேண்டும் என்றார்.


Comments

Popular posts from this blog