ஆசிரியர் பட்டயப்பயிற்சி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு ஒரு கேள்விக்குறி - 7 ஆண்டுகளில் 414 பயிற்சி நிறுவனங்கள் மூடல்!




கடந்த 7 ஆண்டுகளில் 414 பயிற்சி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், ஆசிரியர் பட்டயப் பயிற்சி முடித்த 1 லட்சத்து 84 ஆயிரத்து 470 பேர் வேலைக்கு காத்திருக்கின்றனர்.


இடைநிலை ஆசிரியர் பட்டயப்பயிற்சியை முடிக்கும் மாணவர்களுக்கு வேலை கிடைக்காததாலும், தொடக்கக் கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 2014ஆம் ஆண்டிற்குப் பின்னர் நியமனம் செய்யப்படாமல் இருப்பதாலும் மருத்துவம், பொறியியல் படிப்பிற்கு இணையாக போட்டி போட மாணவர்கள் சேர்க்கை இல்லாமல் ஆசிரியர் பட்டயப்பயிற்சி நிறுவனங்கள் இருக்கிறது.


இதனால் கடந்த 7 ஆண்டுகளில் 414 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. திமுக ஆட்சி அமைந்துள்ள நிலையில் 20 மாவட்ட ஆட்சியர் பயிற்சி நிறுவனங்களில் மீண்டும் மாணவர்கள் சேர்க்கை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்குமா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.


மாணவர்கள் சேர்க்கை இல்லாத காரணத்தால் சுயநிதி ஆசிரியர் பட்டயப்பயிற்சி நிறுவனங்கள் 2015ஆம் ஆண்டில் 402 எனவும், மாணவர்களுக்கான இடம் 25,200 எனவும் இருந்தது. ஆனால், 2022ஆம் ஆண்டில் 33 சுயநிதி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், 1950 மாணவர்கள் சேர்ப்பதற்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. 369 தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.


திமுக ஆட்சியில் தொடரும் நிலை: மேலும் கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி வரையில் தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்புத்துறையில் இடைநிலை ஆசிரியர்கள் பணியை முடித்த 1 லட்சத்து 84 ஆயிரத்து 470 பேரும், பட்டதாரி ஆசிரியர்கள் 3 லட்சத்து 58 ஆயிரத்து 795 பேரும், முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் 2 லட்சத்து 68 ஆயிரத்து 350 பேருக்கும் வேலை கிடைக்குமா என காத்திருக்கின்றனர்.


கடந்த 2018ஆம் ஆண்டு மாநிலக்கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம் நடத்தப்பட்டு தமிழ்நாட்டில் செயல்பட்டு வந்த 32 மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை 12ஆக குறைக்க அரசு உத்தரவிட்டது. 2018 ஜூன் 28ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவை விதி எண் 55இன் கீழ் அப்போதைய எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் சக்கரபாணி, பொன்முடி, தங்கம் தென்னரசு, கோவி.செழியனர் ஆகியோர் அவசரப் பொது முக்கியத்துவம் பெற்று அரசின் கவனத்தை ஈர்த்துப் பேசினர்.


மேலும், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை மூடக்கூடாது எனவும் வலியுறுத்தினர். அப்போதைய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், இடைநிலை ஆசிரியர்களின் நியமனங்களும் வெகுவாக குறைந்துள்ளதன் அடிப்படையில் தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு விருப்பம் காட்டுவதில்லை எனவும், தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூடுவதற்கு விண்ணப்பம் செய்துள்ளதாகவும் எடுத்துக் கூறினார்.


பயிற்சி நிறுவனங்கள் குறைப்பு: தற்போது தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்துள்ளதால், மூடப்பட்டுள்ள 20 மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலும் மாணவர்கள் சேர்க்கை நடத்தப்படுமா எனவும், இடைநிலை ஆசிரியர்களுக்கு வேலை வாய்ப்பினை அளிக்கும் வகையில், ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுமா எனவும் ஏக்கத்துடன் இடைநிலை ஆசிரியர்கள் காத்திருக்கின்றனர்.


கடந்த 2015ஆம் ஆண்டில் 30 அரசு மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களும், 9 அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களும், 39 அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களும், 402 தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களும் இருந்தன. ஆனால், கடந்த 2022ஆம் ஆண்டில் 12 அரசு மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களும், 9 அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களும், 6 வட்டார ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களும், 13 அரசு உதவிபெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களும், 33 தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன.


தமிழ்நாட்டில் செயல்பட்டு வந்த 32 மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை 12 ஆக குறைக்க கடந்த 2018ஆம் ஆண்டு அரசு உத்தரவிட்டது. இதனால் கடந்த 2015ஆம் ஆண்டில் 402 என்ற எண்ணிக்கையில் இருந்த தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், நடப்பு கல்வியாண்டில் 33 என குறைந்துள்ளது.


அதேபோல் கடந்த 2015ஆம் ஆண்டில் 39ஆக இருந்த அரசு உதவிபெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், இந்த ஆண்டில் 13ஆக குறைந்துள்ளன. இதனால் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் 2022 ஆண்டு வரை மட்டும் 414 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.


மாணவர்கள் சேர்க்கை குறைவு: தமிழ்நாட்டில் தற்பொழுது 12 மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 1,100 இடங்களும், 6 ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 300 இடங்களும், 9 அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 440 இடங்களும், 13 அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 1,100 இடங்களும், 33 சுயநிதி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 1,950 இடங்கள் என மொத்தம் 4,890 இடங்களில் மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.


இது குறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பேட்ரிக் ரைமண்ட் கூறுகையில், "ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் குறைந்து வருவதால் தொடர்ந்து பயிற்சி நிறுவனங்கள் மூடப்பட்டு வருகிறது. ஆசிரியர்களுக்கான பணி வாய்ப்புகள் குறைந்திருக்கின்றன.


ஆசிரியர் தகுதித்தேர்வு நடந்த பின்னரும் போதிய ஆசிரியர்களுக்கான நியமனம் இல்லை. அரசு உதவி பெறும் பள்ளிகளில் கூடுதலாக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த காலங்களில் மருத்துவம், பொறியியல் படிப்பிற்கு இணையாக மாணவர்கள் சேர்க்கையில் போட்டி நிலவியது. தற்பொழுது 6ஆம் வகுப்பு முதல் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர்.


அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த நான்கு ஆண்டுகளாக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படவில்லை உள்ளிட்ட காரணங்களால் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருகிறது. அரசு பகுப்பாய்வு செய்து ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களின் தரத்தை உயர்த்தவும், காலிப்பணியிடங்களை நிரப்பவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என்றார்.


காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும்: இது குறித்து இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஜே.ராபர்ட் கூறுகையில், "தொடக்கக்கல்வி துறையில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை கையாளும் இடைநிலை ஆசிரியர்களை உருவாக்கும் ஆசிரியர் பயிற்சி மையங்கள் அனைத்தும் தமிழ்நாட்டில் மூடப்பட்டு வருகின்றன. அதற்கு முக்கிய காரணங்கள் 2012ஆம் ஆண்டில் 11,000 இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.


இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஜே.ராபர்ட்

அதன்பின்பு இரண்டு ஆண்டுகள் கழித்து 2014ஆம் ஆண்டு 1,834 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். தொடர்ந்து எட்டு ஆண்டுகள் கடந்தும் இதுவரை இடைநிலை ஆசிரியர்கள் நியமனங்கள் எதுவும் செய்யப்படவில்லை. ஆசிரியர் பட்டயப் படிப்பு முடித்த 2,25,000 ஆசிரியர்கள் உள்ளனர். அதில் 60,000 ஆசிரியர்கள் மேல் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


இதுபோன்ற சூழ்நிலையில் தான் ஆசிரியர் பட்டயப்படிப்பின் மீதான மோகம் குறைந்து அனைத்து ஆசிரியர் பயிற்சி மையங்களிலும் மாணவர் சேர்க்கை இல்லாமல் மூடப்பட்டு வருகிறது. மேலும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 6ஆவது ஊதிய குழுவில் இழைக்கப்பட்ட அநீதி இன்னும் தொடர் கதையாகி வருகிறது. அவர்களுக்கு துப்புரவுப் பணியாளர்களுக்கு இணையான அடிப்படை ஊதியம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.


புதிதாக நியமனம் பெறவிருக்கும் ஆசிரியர்களுக்கு மிகக்குறைந்த ஊதியமே வழங்கப்படும் என்பதால், இடைநிலை ஆசிரியர் பயிற்சி பள்ளியில் மீதான மோகம் வெகுவாக குறைந்து வருகிறது. தற்போது தொடக்கக் கல்வித் துறை இயக்ககம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் 9,000 இடைநிலை ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன.


விரைவில் அவை நிரப்பப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே, அரசுப் பள்ளிகளில் தொடர்ந்து அதிகரிக்கும் மாணவர்கள் சேர்க்கைக்கு ஏற்ப இடைநிலை ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog