ஆசிரியர்களுக்கு மலைப் பகுதிகளில் ஓராண்டு கட்டாய பணி: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு




தொடக்கக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் மலைகள் அதிகம் உள்ள மாவட்டங்களில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களும் கட்டாயம் ஓராண்டு மலைப் பகுதியில் பணியாற்ற வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.


தமிழ்நாட்டில் ஈரோடு, தேனி, சேலம், வேலூர், திண்டுக்கல், திருப்பத்தூர், தருமபுரி ஆகிய 7 மாவட்டங்களில் மலைகள் அதிகம் உள்ளன. இந்த மாவட்டங்களில் 20 கல்வி ஒன்றியங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் மலைக்கு கீழ் பகுதியில் உள்ள சமவெளியில் பணிபுரிய விரும்புகின்றனர். ஆனால், மலையின் மேல் பகுதிக்குச் சென்று பணிபுரிய விரும்புவதில்லை.


இந்நிலையில், மலையின் மேல் பகுதியில் உள்ள மாணவர்களும் பயன்பெறும் வகையில் மலைப் பகுதி சுழற்சிக்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளில் திருத்தம் செய்து பள்ளிக் கல்வித் துறை செயலாளர் காகர்லா உஷா உத்தரவிட்டுள்ளார். மலைப்பாங்கான இடங்களில் தொடக்கக் கல்வி இயக்கத்தின்கீழ் மலைப் பகுதிகளில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள், தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் என அனைவரும் மலைப் பகுதியில் பணிபுரிய தயங்குவதால், குறைந்தது ஓராண்டு கட்டாயமாகப் பணியாற்ற வேண்டும்.


சுழற்சி முறையில் அந்த ஒன்றியங்களில் உள்ள ஆசிரியர்கள் மலைப் பகுதிகளில் பணியாற்றுவது முழுமை பெறும் வரை மலைப் பகுதிகளில் ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவார்கள். அந்த ஒன்றியத்தில் பணியில் உள்ள அனைவரும் மலையில் பணியாற்ற வேண்டும். பதவி உயர்வு பணியிடங்களில் காலியிடங்களை முதலில் மலைப் பகுதிக்கு வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog