கல்லூரி, பாலிடெக்னிக், ஐடிஐ மாணவர்கள் விடுதிகளில் தங்கி பயில 31ந்தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்.



கல்லூரி, பாலிடெக்னிக், ஐடிஐ படிக்கும் மாணவர்கள் அரசு வழங்கும் விடுதியில் தங்கி பயில விரும்பினால் வரும் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க சென்னை மாவட்ட கலெக்டர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.


கல்லூரி, பாலிடெக்னிக், ஐடிஐ விடுதிகளில் தங்கி பயில மாணவர்கள் வரும் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என்று சென்னை மாவட்ட கலெக்டர் அமிர்த ஜோதி தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கென தனியே விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் மாணவர்களுக்கு 11, மாணவிகளுக்கு 5 என மொத்தம் 16 விடுதிகள் உள்ளன. சென்னையில் இயங்கி வரும் கல்லூரிகளில் பாலிடெக்னிக், ஐடிஐ விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு மற்றும் பாலிடெக்னிக், ஐடிஐ படிப்புகளில் பயிலும் மாணவ, மாணவியர் சேர தகுதியுடையவர்கள். இவர்களில் விடுதிகளில் அனைத்து வகுப்பை சேர்ந்த மாணவ, மாணவிகளும் அரசால் நிர்ணயிக்கப்பட்ட விகிதாச்சார அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.


இவர்களுக்கு விடுதிகளில் எவ்வித செலவுகளும் இல்லாமல் பல சலுகைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. மேலும் அனைத்து விடுதி மாணவ, மாணவியர்களுக்கும் உணவும், தங்கும் வசதியும் இலவசமாக அளிக்கப்பட்டு வருகிறது. விடுதிகளில் சேருவதற்கான தகுதிகளை பொறுத்தவரை, பெற்றோர் அல்லது பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.


இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கி.மீ.க்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவியருக்கு பொருந்தாது. தகுதியுடைய மாணவ, மாணவியர்கள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினிகளிடமிருந்தோ அல்லது மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இரண்டாம் தளத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்தோ இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.


கல்லூரி விடுதிகளை பொறுத்தவரை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும் 31ம்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.


கல்லூரி மாணவ, மாணவியர்கள் விண்ணப்பிக்கும் போது, சாதி மற்றும் பெற்றோரின் ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் அளிக்கலாம் அல்லது விடுதியில் சேரும்போது சான்றிதழ்களை அளிக்கலாம்.


ஒவ்வொரு விடுதியிலும் முகாம்வாழ் இலங்கை தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே 5இடங்கள் ஏற்படுத்தப் பட்டுள்ளன. ஒவ்வொரு விடுதியிலும் மீட்கப்படும் குழந்தை தொழிலாளர்களை எக்காலத்திலும் எந்த நேரத்திலும் எந்தவித நிபந்தனைகளும் இல்லாமல் சேர்த்துக்கொள்ளவும் அவர்களது படிப்பு முடியும் வரை விடுதிகளில் தங்கி பயிலவும் அனுமதிக்கப்படுவர். எனவே, மாணவ, மாணவியர் அரசின் இச்சலுகைகளை பெற்று பயனடைலாம்.


இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog