தமிழக அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க இடைக்காலத் தடை




தமிழக அரசுப் பள்ளிகளில் உள்ள காலியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது.


தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் காலியாக 13,331 ஆசிரியா் பணியிடங்களில் பள்ளி மேலாண்மை குழுக்கள் வாயிலாக தற்காலிக ஆசிரியா்களை நியமிக்க பள்ளிக் கல்வித்துறை அனுமதி அளித்தது.


இதையடுத்து இதில் சில முறைகேடு நடப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது.


விசாரணையில், நிரந்தர ஆசிரியர்களை நியமிப்பதில் தமிழக அரசுக்கு என்ன பிரச்னை இருக்கிறது? என்று கேள்வி எழுப்பிய நீதிமன்றம், ஆசிரியர்களை தகுதி அடிப்படையில் நியமிப்பதற்கும் முன்னுரிமை அடிப்படையில் நியமிப்பதற்கும் வேறுபாடு உள்ளது என்றும் கூறியுள்ளது.


மேலும், அரசுப்பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.


'இல்லம் தேடிக் கல்வி' திட்டத்தில் பணிபுரிபவர்களுக்கு ஆசிரியர் பணி வழங்கும்பட்சத்தில் அரசியல்வாதிகளும் அரசு அதிகாரிகளும் தங்களுக்குத் தெரிந்தவர்களை பணியில் அமர்த்த வாய்ப்புள்ளதாக மதுரைக்கிளை ஏற்கெனவே கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


அதுபோல முன்னதாக, தற்காலிக ஆசிரியா்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடைபெறுவதாக புகாா் எழுந்ததையடுத்து பணி நியமனங்களை நிறுத்தி வைக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிடுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog