அரசு கல்லூரி பேராசிரியர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை போக்க வேண்டும்- பாமக



7 ஆண்டுகள் ஆன பிறகும் பணி நிலைப்பு ஆணை வழங்காமல் அரசு கல்லூரி உதவி பேராசிரியர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை போக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


தமிழ்நாடு அரசு கல்லூரிகளில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு பணியில் சேர்ந்த உதவி பேராசிரியர்களுக்கு இன்னும் பணி நிலைப்பு ஆணை வழங்கப்படாமல் உள்ளது. இதனால் அவர்களின் ஊதிய உயர்வு, பதவி உயர்வு போன்ற சலுகைகள் பெறமுடியாமல் இருக்கிறது.


இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாடு அரசு கல்லூரிகளில் 7 ஆண்டுகளுக்கு முன் பணியில் சேர்ந்த 1,000-க்கும் கூடுதலான உதவி பேராசிரியர்களுக்கு, ஓராண்டில் வழங்கப்பட வேண்டிய பணி நிலைப்பு ஆணை, இன்று வரை வழங்கப்படவில்லை. கல்லூரிக் கல்வி இயக்குனரகத்தின் அலட்சியத்தால் உதவி பேராசிரியர்களுக்கு ஊதியம் மற்றும் பணி நிலை உயர்வு மறுக்கப்பட்டு வருவது நியாயப்படுத்த முடியாத அநீதி ஆகும்.


தமிழக அரசுக்கு சொந்தமான கலை மற்றும் கல்லூரிகளுக்கு 1093 உதவி பேராசிரியர்கள் கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூலை மாதம் நியமிக்கப்பட்டனர். உதவி பேராசிரியராக தேர்வு செய்யப்பட்டவர்கள் பணியில் சேர்ந்த நாளில் இருந்து ஓராண்டு தகுதி காண் பருவமாக (Probation Period)கருதப்படும். இந்தக் காலத்தில் அவர்களின் கல்விச் சான்றிதழ் சரிபார்ப்பு, கடந்த கால நடத்தைகள், பணித்திறமை ஆகியவை ஆய்வு செய்யப்படும். ஓராண்டு தகுதிகாண் பருவம் முடிவடைந்தவுடன், அவர்களுக்கு பணி நிலைப்பு சான்றிதழ் வழங்கப்படும்.


இந்த நடைமுறைப்படி 2016-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் அவர்களுக்கு பணி நிலைப்பு சான்றிதழ் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், மொத்தம் 7 ஆண்டுகள் நிறைவடைந்த பிறகும் கூட, 1093 ஆசிரியர்களுக்கும் பணிநிலைப்பு சான்றிதழ்கள் வழங்கப்படவில்லை. பணி நிலைப்பு சான்றிதழே வழங்கப்படாததால் இரு ஆண்டுகளுக்கு முன் கிடைத்திருக்க வேண்டிய பணிநிலை உயர்வு மற்றும் தர ஊதிய உயர்வு கிடைக்கவில்லை. அடுத்த 3 ஆண்டுகளில் இரண்டாவது பணிநிலை உயர்வு மற்றும் தர ஊதிய உயர்வு கிடைக்குமா? என்பதும் மிகப்பெரிய கேள்விக் குறியாகவே உள்ளது.


2015-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த பலர் கடந்த சில ஆண்டுகளில் ஓய்வு பெற்று விட்டனர். ஆனால், அவர்களுக்கு பணி நிலைப்பு சான்றிதழ் வழங்கப்படவில்லை என்பதால், அவர்களுக்கு ஓய்வுக்கால பயன்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதற்கு உடனடியாக தீர்வு காணப்படவில்லை என்றால், அடுத்த சில ஆண்டுகளில் கிடைக்க வேண்டிய இரண்டாவது பணி நிலை உயர்வையும், தர ஊதிய உயர்வையும் இழக்க வேண்டியிருக்கும். இது அவர்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தி விடக்கூடும்.


நிர்வாகத்தின் தரப்பில் நடந்த தவறுக்காக உதவி பேராசிரியர்கள் பாதிக்கப்படுவதை அரசு அனுமதிக்கக் கூடாது. எனவே, 2015-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த அனைத்து உதவி பேராசிரியர்களுக்கும் உடனடியாக பணி நிலைப்பு சான்றிதழ் வழங்கப்பட வேண்டும். அதனடிப்படையில், அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பணிநிலை உயர்வையும், தர ஊதிய உயர்வையும் உரிய காலத்திலிருந்து கணக்கிட்டு வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

Comments

Popular posts from this blog