தமிழகத்தில் தற்போது  நடைபெறும் ஆசிரியர் நியமனம் கல்வித்துறை அதிகாரிகள் சீரழித்து கொண்டு வருவதால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி???




தமிழக அரசு ஆசிரியர் பணியிடங்களை நிரப்புகையில் B.Ed., மற்றும் ஆசிரியர் பட்டய பயிற்சி முடித்து சிலபல ஆண்டுகள் தனியார் பள்ளிகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டுள்ள ஆசிரியர்களுக்கு அரசுப் பள்ளி ஆசிரியராக பணியாற்ற வாய்ப்புகள் வழங்கவேண்டும் என தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைக்கிறேன். 


அவ்வாறு அனுபவமிக்கவர்கள் மாணவர்களை சிறப்பாக கையாளுவர். Subject Knowledge அதிகம் இருக்கும். எனவே இத்தகையோர் TRB தேர்வு எழுதுகையில் அவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவித்து, நேர்முகத் தேர்வு வைத்து பணியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் தமிழக அரசு.


புதிதாக B.Ed., அல்லது  D.T.Ed., முடித்தவர்கள்  நன்றாக TRB தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று பணியில் அமர்வது எளிதானது. ஆனால் ஆரோக்கியமானதல்ல.


இன்றைய மாணவர்களை கையாள Subject Knowledge மட்டும் போதுமானதல்ல. உளவியல் மற்றும் வாழ்க்கை பற்றிய தெளிவும், அறிவும் இருந்தால் மட்டுமே இன்றைய மாணவர்களை நிதானம் மற்றும் கண்ணியம் கலந்த கண்டிப்போடு வழிநடத்த இயலும். இதையெலாம் ஒரு பாடமாக B.Ed., D.T.Ed., இல் படித்தால் போதாது. திருமணமாகி குடும்பம், பிள்ளைகள், அவர்தம் கல்வி என பொறுப்பும், கடமையும் உடையவர்களாக மாறும்போதுதான் முழு மனிதர்களாகிறார்கள்.


தற்போதுதான் படிப்பு முடித்து வந்துள்ளவர்களை நேரடியாக கைநிறைய சம்பளம், சுமையற்ற பணி, அதிக விடுமுறை தினங்கள், அரசு கடன் வசதிகள், இன்னபிற சலுகைகள் என மேலான பொறுப்புகளில், அரசுப் பள்ளிகளில் பணிக்கு அமர்த்துகையில் அவர்கள் நிதானமிழக்க உளவியல்பூர்வமாக  வாய்ப்புகள் உள்ளதை தமிழக அரசு உணரவேண்டும். 


படிப்பு முடித்துவிட்டு தனியார் பள்ளிகளில் சொற்ப சம்பளத்துக்கு பணியாற்றி, அதிகநேர வேலை, பணிச்சுமை, விடுமுறை குறைவு, நிர்வாகத்தின் கேள்விகள், அழுத்தம் என சிரமங்களுடன் சிலபல ஆண்டுகள் பணியாற்றி மாணவர்களின் உளவியல், பாடம் நடத்தும் முறைகள், மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தல், அவர்களின் பிரச்சினைகளில் உதவுதல், கௌன்சலிங் என பலவற்றையும் கற்று தேர்ந்து பிறகு அவர்கள் அரசுப் பள்ளி ஆசிரியர்களாக பணியாற்ற வாய்ப்பு கிடைக்கையில் அதனை மாபெரும் அரிய வாய்ப்பாக எண்ணி, கடமை கண்ணியம் கட்டுப்பாடு என அர்ப்பணிப்பு உணர்வுடன் சிறப்பாக பணியாற்றுவர். 


தமிழகம், புதுச்சேரியில் ஆயிரக்கணக்கானோர் இவ்வாறு B.Ed., படித்துவிட்டு சொற்ப சம்பளத்தில் தனியார் பள்ளிகளில் பல ஆண்டுகளாக அரும்பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கும் குடும்பங்கள் உண்டு. பலர் B.Ed., படிப்பை முடித்து வீட்டிலேயே முடங்கியும் கிடக்கின்றனர்.


அன்று வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம்  ஆயிரக்கணக்கானோர் ஆசிரியர் பணி கிடைத்து இன்றளவும் பல அரசுப் பள்ளிகளில் சேவையென பணியாற்றி வருகின்றனர். 


ஜெயலலிதா அம்மையார் அவர்களின் அதிமுக அரசுதான் TRB ஐ கொணர்ந்தது. அதை கொண்டு வந்ததன் நோக்கம் நல்ல திறமையுள்ள ஆசிரியர்களை அரசுப் பள்ளிகளில் அமர்த்தி கல்வித்தரம் உயர்த்தவேண்டும் என்பதாகும். ஆனால் அவ்வாறு கல்வித்தரம் தற்போது உயர்ந்துள்ளதா என்றால் இல்லை என்பதே பதிலாக உள்ளது. எனவே அந்தமுறையிலான Recruitment தேவையில்லை என்பதே பல கல்வியாளர்களின் கருத்தாகவுள்ளது. 


கடந்த காலங்களில் டாக்டர். கலைஞர் அவர்களது ஆட்சியில் 45 வயதில்கூட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் அரசுப் பள்ளி ஆசிரியர் பணி கிடைத்து நல்வாழ்க்கை அமைத்துக்கொண்டவர்கள் ஏராளம், ஏராளம். அந்த நிலை இன்று மீண்டும் வேண்டும். படித்து முடித்த பல தனியார் பள்ளி ஆசிரியர்களின் குடும்பங்கள் நல்ல பொருளாதார வசதியோடு செழிக்கவேண்டும். இதற்கு தமிழக அரசு வழிவகை செய்யவேண்டும்.  


தற்போதைய காலட்டத்தில் திறமையுள்ள ஆசிரியர்கள் மட்டும் போதாது, அவர்கள் அர்ப்பணிப்பு மனப்பான்மை கொண்டவர்களாகவும் இருக்கவேண்டும் என்பது புரியவருகிறது.


காலத்துக்கேற்ற மாற்றங்களை வரவேற்றுள்ள தமிழக அரசு, இன்றைய சூழலுக்கேற்ப TRB ஐ நீக்கி பழையபடியே வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்கலாம் அல்லது தனியாரில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு வயது வித்தியாசம் பாராமல், அவர்கள் TRB தேர்வு எழுதினாலே தேர்ச்சி என அறிவித்து அவர்களுக்கு பணி வாய்ப்புகள் தரலாம்.


40 வயதுக்கு மேலாகி தனியாரில் பத்தாயிரத்துக்கு பணியாற்றும் எண்ணற்ற நல்லாசிரியர்களின் குடும்பங்களின் சார்பில் இக்கோரிக்கையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வைக்கிறேன். புதிதாக படித்து முடித்தவர்கள் ஒரு 5 ஆண்டுகளேனும் தனியாரில் சொற்ப சம்பளத்தில் பணியாற்றட்டும். கல்வியின் நெளிவு சுளிவுகளை கற்கட்டும். தவறில்லை.  


புதுவையும் தமிழகமும் ஒரே கல்வித் திட்டத்தில் இயங்குவதால் இக்கோரிக்கையை வைக்க நான் கடமையும், பொறுப்பும் கொண்டவனாக உணர்ந்து, ஒரு மனிதவள மேம்பாட்டு பயிற்றுநராக, மக்களின் நலம் விரும்பியாக இதை எழுதுகிறேன். 


தமிழக முதல்வர் மாணவர்கள், ஆசிரியர்கள், மற்றும் கல்வித்துறையின் வளர்ச்சி சார்ந்து நல்ல முடிவெடுப்பார் என நம்புகிறேன். நன்றி. 


இப்படிக்கு,

எஸ். பாஸ்கரன்,

தலைவர்,

புதுச்சேரி வளர்ச்சிக் கட்சி. www.pdprule.com ; www.deehr.in.

9944025608.

Comments

Popular posts from this blog