அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு நாளைமுதல் கலந்தாய்வு.. இத்தனை விண்ணப்பங்களா..?



கடந்த சில ஆண்டுகளாகவே பொறியியல் சார்ந்த படிப்புகள் மீதான மோகம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே குறைந்துவிட்டது.



20 ஆண்டுகளுக்கு முன்பு தெருக்கு ஒரு இஞ்சினியர் இருந்த காலம் கடந்து தற்போது வீட்டுக்கு இரண்டு இஞ்சினியர் என்ற காலம் வந்துவிட்டது.


மேலும், இதன் காரணமாக வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்து ஆட, மாணவர்களின் பார்வை தற்போதைய நிலையில் கலை மற்றும் அறிவியல் பக்கம் திரும்பியது. இந்த நிலையில், வரலாறு காணாத வகையில் இந்த வருடம் மட்டும் கலை மற்றும் அறிவியல் சார்ந்த படிப்புகளுக்கு 4 லட்சத்து 7 ஆயிரத்து 45 விண்ணப்பங்கள் பதிவாகியுள்ளது.


தமிழகம் முழுவதும் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள பி.ஏ., பி.காம்., பி.பி.ஏ., பி.சி.ஏ., பி.எஸ்சி. உள்பட படிப்புகளில் இருக்கும் ஒரு லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பப்பதிவு கடந்த மாதம் (ஜூன்) 22ம் தேதி முதல் தொடங்கியது.


கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பப்பதிவு செய்ய கடந்த மாதம் 27ம் தேதி கடைசி நாளாக இருந்தது. மொத்தம் உள்ள ஒரு லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களுக்கு 4 லட்சத்து 7 ஆயிரத்து 45 விண்ணப்பங்கள் பதிவானது.


இதில் 3 லட்சத்து 34 ஆயிரத்து 765 விண்ணப்பங்கள் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டு இருப்பதாகவும், அவற்றில் 2 லட்சத்து 98 ஆயிரத்து 56 விண்ணப்பங்களுக்கு கட்டணங்கள் செலுத்தியிருப்பதாகவும் உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது.



இந்நிலையில், 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு வரும் 5-ம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெறும் என்று கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. மாணவர்களுக்கு இ-மெயில் மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மூலம் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.


அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆக.5 முதல் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. 163 கல்லூரிகளில் (நாளை) ஆக.5 முதல் ஆன்லைனிலேயே கலந்தாய்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசை பட்டியல் நாளை வெளியிட உள்ளதாக கல்லூரி கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.


அதேபோல முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் எப்போது தொடங்கப்படும் என்ற விவரம் பின்னர் வெளியிடப்படும் என்றும் கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog